

எரிமலை ஒரு இயற்கை அற்புதம். ஆபத்தான அற்புதம். இந்தியாவில் எரிமலைகள் எதுவும் இல்லாததால் நமக்கு எரிமலையை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் மிகவும் குறைவு. நமது பூமி வெளியில் பார்ப்பதற்குத்தான் குளிர் பந்து. அதன் மையப்பகுதியில் நிலவும் உஷ்ணம் சூரியனின் மேற்பரப்பில் திகழும் சூட்டினைவிட அதிகம். இந்த உஷ்ணம்தான் அப்போதைக்கப்போது எரிமலையாய் வெடித்து வெளி வருகிறது.
உலகில் நூற்றுக்கணக்கான எரிமலைகள் இருக்கின்றன. எரிமலையை முற்றிலும் அணைந்த எரிமலைகள் தாற்காலிகமாக அடங்கி இருக்கும் எரிமலைகள் மற்றும் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலைகள் என பிரித்துள்ளார்கள். உலகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற எரிமலைகள் சிலவற்றை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
முதலில் ஜப்பானுக்கு போவோம். ஜப்பானின் தலைநகர் டோக்கியோ. இந்த உலகிலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நகரத்தின் மிக அருகில் கம்பீரமாக நிற்கும் எரிமலைதான் பியூஜி. பியூஜி ஒரு பியூட்டி. கன கச்சிதமான கூம்பு வடிவில் இருக்கும் எரிமலைகளிலேயே மிகவும் அழகான எரிமலை என்ற பேரெடுத்த மலை பியூஜியாகும். ஜப்பானியர்களுக்கு இதன் மேல் அத்தனை பாசம். இந்த மலையை அவர்கள் ஒரு புனித மலையாக கருதி அதனைகாண ஆன்மீக பயணம் மேற்கொள் கிறார்கள். இது ஒரு ஆக்டிவ் எரிமலை. டோக்கியோ நகரத்தில் இருந்து இதை கண்டு களிக்கலாம். டோக்கியோவில் இருந்து மற்ற இடங்களுக்கு ரயிலிலோ சாலை வழியாக போகும்போது இந்த எரிமலையை பார்க்க முடியும்.
அடுத்து இத்தாலியில் உள்ள எத்னா என்ற மற்றொரு எரிமலைக்கு. இந்த மலை இன்றும் குமிறிக் கொண்டிருக்கும் ஒரு எரிமலை. இதன் க்ரெட்டரிலிருந்து சுருட்டு பிடிப்பவன் வாயிலிருந்து வருவதுபோல புகை வந்துகொண்டு இருக்கிறது. இந்த எரிமலைதான் தற்போது உலகிலேயே மிகவும் கோபத்தில் இருக்கும் எரிமலையாகும்.
அடுத்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஹவாயுக்கு. இங்குள்ள மவுனா லோவா என்ற எரிமலைதான் பூமியின் மேல் பகுதியில் உள்ள மிகப்பெரிய விழித்திருக்கும் எரிமலையாகும். இதை தவிர ஹவாயில் நான்கு எரிமலைகள் இருக்கின்றன. நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு இருப்பதுபோல் ஐந்து எரிமலையை மடியில் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் இந்த துணிச்சலான ஹவாய் மக்கள்
அடுத்து நாம் பார்க்கப் போவது ஈகுவடோர் இல் உள்ள ஒரு ரவுடி எரிமலையைத்தான். இதன் பெயர் கொடோபாக்சி. கடந்த அறுநூறு ஆண்டுகளில் இது எழுபது முறை குமுறி இருக்கிறதாம்.
ஆபிரிக்க கண்டத்தில் மிக உயரமான கிளிமஞ்சாரோ ஒரு ஆழமான உறக்கத்தில் இருக்கும் ஒரு எரிமலை. மவுண்ட் எவெரெஸ்டுக்கு அடுத்து இந்த மலையில்தான் அதிக மக்கள் ஏற ஆர்வம் காட்டுகிறார்கள். இது தான்சானியாவில் உள்ளது, பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருந்தும் இதன் உச்சி பனி சூழ்ந்து காட்சி அளிப்பதை புவியியல் வல்லுநர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை .
உலகில் ஆயிரத்துக்கும் மேல் எரி மலைகள் உள்ளன. சிலது விழித்து கொண்டும் சிலது கோமாவிலும் சிலது அப்போதைக்கப்போது புகை பிடித்து கொண்டும் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்றால் அது நடக்காத காரியம். ஆகவேதான் அவைகளில் மிகவும் பேசப்பட்டவைகளை பற்றி மட்டும் பார்த்தோம்.
நம் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு எரிமலையை பற்றி பாப்போம். அதுதான் அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒன்றான Barren Island இல் உள்ள எரிமலையாகும். இந்த கட்டுரையை முடிக்கும் முன் ஒரு முக்கிய விஷயம் எரிமலையிலிருந்து உமிழப்படும் சாம்பலும் அதன் ஆரிய நெருப்பு குழம்பும் தாது பொருட்கள் நிறைந்த மிக உயர்ந்த உரமாக கருதப்படுகிறது.