ஏரி என நினைத்து சோலார் பேனலில் மோதும் பறவைகள்… பசுமை மின்சாரம் ஏற்படுத்தும் விபரீதம்!

solar-panels-killing-birds
solar-panels-killing-birds
Updated on

உலகம் முழுவதும் இப்போது எங்கு பார்த்தாலும் பசுமை மின்சாரம் பற்றிய பேச்சுதான் அதிக அளவில் ஒலிக்கிறது. பெட்ரோல், நிலக்கரி போன்ற பழங்கால எரிபொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டிவிட்டு, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மாபெரும் சோலார் திட்டங்கள் பல நாடுகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது மனித குலத்தின் அன்றாடத் தேவைக்கும், மோசமாகி வரும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும் ஒரு சூப்பரான விஷயம்தான். 

இருந்தாலும், இந்த புதிய தொழில்நுட்பம் இயற்கையில் வாழும் சில உயிரினங்களுக்கு, குறிப்பாக வலசை போகும் பறவைகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்ற ஒரு அதிர்ச்சியான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான சோலார் பூங்காக்கள் அப்பாவிப் பறவைகளை எப்படி ஏமாற்றுகின்றன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பறவைகளை குழப்பும் ஒளி மாயை!

பொதுவாகவே பறவைகள் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் எந்தவிதமான கூகுள் மேப் உதவியும் இல்லாமல் மிகத் துல்லியமாகப் பறந்து செல்லும் அபார திறன் கொண்டவை. அவற்றுக்கு வழிகாட்ட கண்களில் உள்ள பிரத்யேக காந்த விசை உணர்விகளும், அவற்றின் மரபணுக்களில் இயற்கையாகவே பதிந்துள்ள வழிகாட்டும் தொழில்நுட்பமும் பெரிதும் உதவுகின்றன. 

இப்படி பல நாடுகளைத் தாண்டிப் பயணிக்கும் அந்தப் பறவைகளை, நிலப்பரப்புகளில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சோலார் பண்ணைகள் தற்போது கடுமையாகக் குழப்புகின்றன. வானத்தில் இருந்து கீழே பறந்து வரும்போது, கண்ணாடியைப் போல நீல நிறத்தில் பளபளக்கும் சோலார் பேனல்களை மிகப் பெரிய ஏரி அல்லது குளம் என அந்தப் பறவைகள் தவறாகப் புரிந்துகொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
வாயில இன்னொரு வாயா? - ஏலியன் பற்றித் தெரியாத திகிலூட்டும் உண்மைகள்!
solar-panels-killing-birds

இதற்குப் பின்னணியில் இன்னொரு சுவாரஸ்யமான காரணமும் இருக்கிறது. இந்த சோலார் பேனல்களின் பளபளப்பான அமைப்பைப் பார்த்து நீர்வாழ் பூச்சிகளும் அதை தண்ணீர் என நினைத்து பெருமளவில் ஈர்க்கப்படுகின்றன. அந்தப் பூச்சிகளைத் தங்களின் உணவாகச் சாப்பிட வரும் நீர்நிலைப் பறவைகள், பேனல்கள் மீது வேகமாக வந்து மோதித் தரையிறங்குகின்றன. 

இது குறித்து முர்டோக் பல்கலைக்கழகத்தைச் (Murdoch University) சேர்ந்த பேராசிரியர் ட்ரிஷ் ஃப்ளெமிங் (Trish Fleming) தலைமையிலான குழு ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது. சோலார் பேனல்கள் அமைக்கும் முறையில் உரிய பாதுகாப்பு மாற்றங்களைச் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பறவைகள் வீணாக உயிரிழக்க நேரிடும் என அவர் மிகவும் கவலையுடன் எச்சரித்துள்ளார். இயற்கையைக் காக்க வந்த ஒரு தொழில்நுட்பமே பறவைகளுக்கு எமனாக மாறுவது உண்மையிலேயே ஒரு வேதனையான விஷயம்தான்.

இதையும் படியுங்கள்:
கொடிய தேள் விஷத்தில் ஒளிந்திருக்கும் மாபெரும் மருத்துவ ரகசியம்.. இனி இதுதான் ஒரே வழி!
solar-panels-killing-birds

இந்த மாபெரும் சிக்கலைத் தீர்ப்பதற்காக அறிவியலாளர்கள் பல்வேறு மாற்று யோசனைகளையும் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். பேனல்களில் தேவையற்ற ஒளி எதிரொலிப்பதைக் குறைக்கும் வகையிலான அதிநவீன நானோ பூச்சுகளைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சோலார் பண்ணைகளைச் சுற்றி வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் வராத வகையிலான பாதுகாப்பான வேலிகளை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

ஆனாலும், இதுவரை இதற்கான நூறு சதவிகித உறுதியான நிரந்தரத் தீர்வு எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. தூய்மையான மின்சாரம் மனிதர்களின் எதிர்காலத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இந்த அழகிய பூமியை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் மற்ற வாயில்லா உயிரினங்களின் பாதுகாப்பும் மிக மிக அவசியமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com