
பறவைகள் சிறகடித்துப் பறந்துசெல்லும் பேரழகை நம்மில் பலர் நேரடியாகக் கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இப்போதைய பிள்ளைகள் அந்தக் காட்சியை ஓர் ஓவியமாகவோ, திரைப்படம் அல்லது தொலைக் காட்சியாகவோதான் காணவேண்டியிருக்கிறது.
வீட்டுத் தோட்டத்தில் மரங்களில் கூடுகட்டி வாழ்ந்த குயில்கள், கிளிகள், சிட்டுக்குருவிகள், எங்கிருந்தோ வந்து சிலநாட்கள் தங்கியிருந்து பிறகு பிரிந்து செல்லும் அபூர்வ பறவைகள் என்று எத்தனையோ பறவையினங்களை இப்போதைய பெரியவர்கள் கண்டிருக்கிறோம், பரவசப்பட்டிருக்கிறோம்.
நம்மைத்தேடி அந்தப் பறவைகள் வந்தது போக, விலங்கியல் பூங்காக்களுக்குப் போய்த்தான் அதே பெரியவர்களாலும் இப்போது அவற்றைப் பார்க்க முடிகிறது!
வனத்தில் வாழும் பறவைகளையும், ஊர்களில் வாழும் பறவைகளையும் இப்படி விலங்கியல் பூங்காவுக்குப் போய் பார்த்து மகிழ்வதுபோல, பறவை சரணாலயங் களுக்கும் சென்று அதே பரவசத்தை இப்போது நாம் அடைகிறோம்.
தமிழ்நாட்டில் மட்டும் இதுபோன்ற சரணாலயங்கள் மொத்தம் பதினைந்து இருக்கின்றன. அவற்றில் பழவந்தாங்கல், வேடந்தாங்கல் ஆகிய இரு சரணாலயங்களும், முறையே, சென்னை நகருக்கு வடக்கில் பொன்னேரியிலிருந்து பத்தொன்பது கிலோமீட்டரிலும், தெற்கில், செங்கல்பட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுமாக அமைந்திருக்கின்றன.
அந்நாளில் இந்தச் சரணாலயங்களுக்குச் சென்னை நகரிலிருந்து பள்ளி மாணவர்கள் சுற்றுலாவாகப் போய்வந்து அரியவகைப் பறவைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இருவாட்சி, பிணம்தின்னிக் கழுகு, தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப் புறா, பூஞ்சிட்டு, பலவை குக்குறுவான்கள், கொண்டைக் குருவிகள், சிரிப்பான்கள், வானம்பாடிகள் என்று எத்தனையோ வகைப் பறவைகளைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழக நீர்நிலைகளை நாடி, அதாவது இந்தச் சரணாலயங்களைத் தேடி, லட்சக்கணக்கான பறவைகள் வந்து தங்கி, பிறகு ஏப்ரல்-மே மாதங்களில் தத்தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும்.
சாதாரணமாகக் காணப்படும் வெள்ளைக்கொக்கு, நரைகள், நீர்க்காகங்கள் எல்லாம் தமிழகத்துப் பறவைகள். மாநிலம் விட்டு மாநிலம் செல்லக் கூடியதும் தொலை தேசங்களான சைபீரியா, மியான்மர், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலவித வாத்துகள், உள்ளான்கள், ஆலாக்கள் என்றும் வருகை தரும் பறவைகளைக் காணமுடிகிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக இப்போது சில காக்கைகளையும், புறாக்களையும் மட்டுமே நகருக்குள் பார்க்க முடிகிறது! நம் சொந்த வசதிக்காக, நம் ஆடம்பர வாழ்க்கைக்காக இயற்கையை நாம் வஞ்சிக்கும் பலவழிகளுள் இப்படி பறவையினங்களையே அழித்திருப்பதும் ஒன்று.
ஆனால் சற்றே ஆறுதலாக, சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு தென்கொரியாவிலிருந்து சாம்பல் தலை ஆள்காட்டி பறவைகள் குறிப்பிட்ட பருவகாலத்தில் வருகின்றன. அச்சமயத்தில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அவ்வகை பறவைகளை அங்கே காணலாம்.
சென்னையில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மற்றும் தரமணி பகுதிகளில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியிருக்கிறது. இப்போதைய பெரிதும் விலை மதிப்பற்ற நீரை உறிஞ்சி பாதுகாத்து வைக்கக்கூடிய இந்த சதுப்பு நிலப்பகுதி, ஆக்கிரமிப்பு காரணமாக 325 ஏக்கராக சுருங்கிப் போய்விட்டது. ஆனாலும், தன் ஈரத்தன்மை காரணமாக ஏராளமான அரியவகை பறவைகளுக்கு இது புகலிடமாகத் திகழ்கிறது.
சாம்பல் தலை ஆள்காட்டிப் பறவைகள் தவிர, கொசு உள்ளான், கோணமூக்கு உள்ளான், பேதை உள்ளான் ஆகியவகைப் பறவைகளையும் அக்டோபர் முதல் -பிப்ரவரி வரையிலான மாதங்களில் நம்மால் காணமுடிகிறது.
அதேசமயம், இந்தக் காட்சியும் இன்னும் எத்தனை நாளைக்கோ என்ற ஏக்கமும், வருத்தமும், பயமும் நம் நெஞ்சை அழுத்துவது என்னவோ உண்மைதான்.