
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செல்லும் வழியில்தான் உள்ளது அணைக்கரை. இங்கே உள்ள கீழணை வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நான்கு மாவட்ட விவசாய நிலங்களின் பாசனத்துக்கான ஜீவநாடியாக உள்ள கீழணையின் பெருமை குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
தஞ்சை மாவட் டம், அணைக்கரையில் உள்ள கீழணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் என்பவர் பிரிட்டிஷ் பொறியாளர் மற்றும் படைத்தளபதி ஆவார். இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவின் நீர்ப்பாசன வசதிக்காகவும், கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார். இவர், ‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
1829ல் காவிரி பாசனப் பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, ‘ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை பண்டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்’ என்றார். கல்லணைக்கு ‘கிராண்ட் அணை கட்’ என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே.
காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாகப் பாய்ந்து காவிரியில் உரிய நீர்வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு. இதையடுத்து, கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு 1835 - 36ல் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார். இதனால் கொள்ளிடம் ஆற்றில் வீணாக நீர் செல்வது தடுக்கப்பட்டது. தவிர, கும்பகோணம் அணைக்கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு நீர்ப் பாசனங்களையும் இவர் முறைப்படுத்தினார். இவர் 1860ம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பி விட்டார். தனது 96 வயது வரை வாழ்ந்த அவர், 1899ம் வருடம் இறந்து விட்டார்.
கர்நாடக மாநிலம், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்த வந்து கல்லணையை அடைகிறது. மீண்டும் கல்லணையிலிருந்து 67 மைல்கள் கடந்து வந்து கீழணையை அடைகிறது. முடிவாக, கீழணையிலிருந்து 33 மைல் கடந்து போய் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.
தஞ்சையை ஆண்ட இரண்டாம் ராஜராஜன், கங்கை வரை தனது ஆட்சியை நிறுவி, அதன் வெற்றிச் சின்னமாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற கோயிலை நிறுவினான். அதன் மதில் சுவர்களை கொண்டு ஆங்கிலேயர்களால் கீழணை கட்டப்பட்டது. கி.பி. 1836ம் ஆண்டு பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் என்பவரால் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கீழணை கட்டப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டுள்ளது. கீழணை மூலம் கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன. இக்கீழணையில் ஏற்படும் வெள்ளக் காலங்களில் 4.50 லட்சம் கன அடி உச்சக்கட்ட வெள்ளநீர் வடிகாலாக பயன்பட்டு வருகிறது. கீழணை கட்டப்பட்டதிலிருந்து கல்லணையிலிருந்து உள்ளாறு மூலம் கொள்ளிடத்தில் விடப்படுகிறது. கீழணை பாசனத்துக்காக வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வீராணம் ஏரி, கஞ்சங்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 1,26,839 ஏக்கர் பாசன பரப்புக்குப் பயன்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாகப் பிரிந்து வடக்குப் பிரிவு கொள்ளிட ஆறு, தெற்குப் பிரிவு கொள்ளிட ஆறு என அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ. தொலைவில் இரண்டும் சங்கமித்து பின் 33 மைல்கள் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.