
விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் இலாபம் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிர்களில் கீரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருமுறை விதைத்து விட்டால் பலமுறை அறுவடை செய்ய முடியும் என்பது தான் கீரைகளின் சிறப்பம்சம். அதோடு சந்தையில் கீரைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், விவசாயிகள் தொடர்ந்து கீரைகளை விளைவித்து வருகின்றனர். அவ்வகையில் கோடைகாலத்தில் அதிகம் பயிரிடப்படும் பசலைக்கீரையின் வளர்ச்சிக்கு உரங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பது குறித்து எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
விவசாயத்தில் எந்தப் பயிராக இருந்தாலும், அதன் வளர்ச்சிக்கு உரங்கள் அவசியம் தேவை. இன்றைய காலகட்டத்தில் செயற்கையான இரசாயன உரங்கள் பெருகி விட்டதால், உர மேலாண்மையில் விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். மருத்துவ குணங்கள் நிறைந்த பசலைக்கீரை, பெரும்பாலும் உணவுத்தேவைக்காகவே அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பல வகைகள் இருப்பினும் தரைப்பசலை, செடி பசலை, சிறு பசலை மற்றும் கொடி பசலை போன்ற இனங்கள் தான் அதிகளவில் பயிரப்படுகின்றன.
பசலைக்கீரையை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கீரை நாற்றுகளை நட்ட பின், தேவையான அளவில் தண்ணீரைப் பாய்ச்சுவது வேர்களைத் திடப்படுத்தும். நிலம் நல்ல வடிகால் வசதியுடன் இருப்பது அவசியம்.
பாசெல்லசி (Basellaceae) குடும்பத்தைச் சேர்ந்த பசலைக்கீரைகளின் வளர்ச்சியில் உரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பசலைக்கீரையின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் (NPK) ஆகிய ஊட்டச்சத்துக்களை உரங்கள் வழங்குகின்றன. பசலைக்கீரையின் தண்டு மற்றும் இலைகளின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் உதவுகிறது. வேர்களின் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறனை மேம்படுத்த பாஸ்பரஸ் உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஒட்டுமொத்த தாவர வீரியத்தை அதிகரிக்க பொட்டாசியம் உதவுகிறது.
உரங்களின் மூலம் போதுமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால், அதிக சூரிய ஒளியைத் தாங்கி கீரைகள் நன்றாக வளரும். அதோடு ஒளிச்சேர்க்கையையும் திறமையாக மேற்கெள்ளும். ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான குளோரோபிலின் நிறமி நைட்ரஜனில் அதிகமாக இருப்பதால், இலைகளின் உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும். ஊட்டச்சத்து மிகுந்த தாவரங்கள் பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும்.
பசலைக்கீரைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும் போது, அவை அதிக நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்று, நோய்கள் மற்றும் பூச்சிகளைத் தாங்கி நன்றாகவே வளரும்.
தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கத் தேவைப்படும் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உரங்களின் அளவு அதிகமானால், அது எதிர்மறை விளைவுகளைக் கொடுத்து விடும். இதனால் விளைச்சல் குறைவு, மண் வளம் குன்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
பசலைக்கீரையை விதைக்கும் முன் சரியான ஊட்டச்சத்து அளவையும், உரங்களின் அளவையும் தெரிந்து கொள்ள மண் பரிசோதனை செய்யலாம். அருகிலுள்ள வேளாண் மையங்களில் 5 ரூபாய் கட்டணத்தில் விவசாயிகள் மண் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.