உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களில் மீன் வளத்தின் பங்கு!

நவம்பர் 21, உலக மீன்வள நாள்
World Fisheries Day
World Fisheries Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

லகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் சிறு குறு மீனவர்களின் முக்கியப் பங்கை கவனத்தில் கொள்ளவும், மீன் வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் நாளன்று ‘உலக மீன் வள நாள்’ (World Fisheries Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

1997ம் ஆண்டு புது தில்லியில் மீன் அறுவடை செய்பவர்கள் மற்றும் மீன் தொழிலாளர்களுக்கான உலக மன்றம் (World Forum on Fish Harvesters and Fish Workers - WFF) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 18 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடியதன் விளைவாக உலக மீன்பிடி மன்றம் நிறுவப்பட்டது. இந்த கூட்டத்தின்போது, நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கொள்கைகளின் உலகளாவிய ஆணைக்கு வாதிடும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டது.

மீன்வளப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization) மற்றும் மீன் அறுவடை செய்பவர்கள் மற்றும் மீன் தொழிலாளர்களுக்கான உலக மன்றம் (WFF) ஆகியவை கூட்டாக மீன்பிடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பன்னாட்டு நாளை நிறுவ வேண்டுமென்று முன்மொழிந்தன. இந்த முன்மொழிவு 2003ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் நாளில் உலக மீன் வள நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில், உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களில் மீன் வளத்தின் முக்கியப் பங்கு குறித்து உலகளாவிய நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் மீன்வளம் முக்கியமானப் பங்கு வகிக்கிறது. உலகளவில் சுமார் 3 பில்லியன் மக்களுக்கு 20 சதவிகித விலங்குப் புரத உட்கொள்ளலை வழங்குகிறது. இருப்பினும், அதிகப்படியான மீன்பிடித்தல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு ஆகியவை மீன்வளத்தின் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்தச் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மீனவச் சமூகங்களின் தேவைகளுடன் பாதுகாப்பைச் சமநிலைப்படுத்தும் பொறுப்பான மீன்வள மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தவும், உலக மீன் வள நாள் உதவுகிறது.

சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் பொருளாதார வலுவூட்டலின் மூலம் சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு முன்னோடித் துறையாக மீன்பிடித் துறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மீன் உற்பத்தியில் 8 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ள இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தியாளர், இரண்டாவது பெரிய மீன் வளர்ப்பு உற்பத்தியாளர், மிகப்பெரிய இறால் உற்பத்தியாளர் மற்றும் நான்காவது பெரிய கடல் உணவு ஏற்றுமதியாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்டின் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குவதில் இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்திய மீன்பிடித் துறையானது நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், இந்த முன்னேற்றத்தைத் தக்க வைக்க மீன்பிடி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் உறுதி கொண்டுள்ளது. 22 மில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்திக்கான ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா’ (PMMSY) நிர்ணயித்த இலக்குகளை அடைவது மட்டுமல்லாமல், 2024 முதல் 2025 வரையிலான நிதியாண்டில், ஏற்றுமதியில் 1 லட்சம் கோடி ரூபாயை எட்டுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் காற்று மாசு படியாமல் இருக்க சில யோசனைகள்!
World Fisheries Day

உள்நாட்டு மீன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் மீன் வளர்ப்பு, குறிப்பாக உள்நாட்டு மீன்பிடியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது. மொத்த மீன் உற்பத்தியில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. இந்தச் சாதனையானது மத்திய அரசு, மாநில / ஒன்றியப் பகுதிகள் மற்றும் பல்வேறு களங்களில் உள்ள பயனாளிகளின் கூட்டு முயற்சிகளின் விளைவாகும்.

இன்றைய உலக மீன்பிடி நாள், நிலையான மீன்பிடி மேலாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் சிறு-குறு மீனவர்களின் முக்கியப் பங்கை இந்த உலகளாவிய கொண்டாட்டம் வலியுறுத்துகிறது. பொறுப்பான நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் ஊட்டச்சத்தில் மீன் வளத்தின் முக்கியப் பங்களிப்பை ஆதரிப்பதற்கும் இது ஒரு நினைவூட்டலாகச் செயல்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com