
சாதாரணமாக தேக்கு மரத்தில் பர்னிச்சர் வாங்கினால் அதை அனைவரும் தொட்டுப் பார்த்து சிலாகித்துப் பேசுவதுண்டு. மேலும் வைரம் பாய்ந்த மரமாக இருந்தால் அது எண்ணெய்ப் பசையுடன் மினுமினுப்பாக இருப்பதை காணலாம். அதை அப்படி போற்றி புகழ்வதன் காரணம் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
நிலத்தை தேர்வு செய்யும் முறை:
தேக்கு மரம் வருடத்திற்கு 800- 1800 மில்லி மீட்டர் மழை அளவும், நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களிலும் வண்டல் மண் சார்ந்த வகைகளிலும் சிறந்த முறையில் வளரக்கூடியது. தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலங்களில் தேக்கு சாகுபடியைத் தவிர்க்க வேண்டும்.
நிலத்தை சட்டி கலப்பை கொண்டு நன்குழுது பின்னர் கொக்கி கலப்பை கொண்டு ஒருமுறை உழுதல் வேண்டும். அவ்வாறு உழுத நிலங்களில் ஹெட்டேருக்கு 12.5 டன் மக்கிய தொழு உரம் இடுவது நல்லது. பின்பு தேக்கு நாற்றுகளை இரண்டு மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அப்படி நடும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் பதியன்கள் தேவைப்படும்.
தேக்கு மரங்களை வேளாண் நிலங்களில் வளர்க்கும்போது நீர் மற்றும் உர மேலாண்மை மிகவும் அவசியம். முதல் ஆறு மாதங்களுக்கு வாரம் ஒருமுறை ஒரு மரத்தில் பத்திலிருந்து பதினைந்து லிட்டர் வரை என்ற அடிப்படையில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரத்திற்கு 50 கிராம் என்ற அளவில் இடும்பட்சத்தில் மரங்கள் வேகமாக வளரும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு மரத்தின் வளர்ச்சியை பொறுத்து நீரின் தேவையை அதிகரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு சுமார் 5 கிலோ தொழு உரம் இட்டு பராமரிக்கும் பொழுது மரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மர வரிசைகளுக்கு இடையே முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது களைகளின் வளர்ச்சி கட்டுப் படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கப்பெறும். ஊடுபயிர் செய்ய முடியாத பட்சத்தில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இருமுறை களைகளை நீக்கவேண்டும். குறுகிய இடைவெளியில் வளர்ப்பதால் பக்க கிளைகள் தோன்றாமல் நடப்பட்ட நாற்றுகள் உயரமாகவும் நேராகவும் வளரும்.
களைத்தல்:
நட்ட 4 ,8,12,18, 25 ஆம் ஆண்டுகளில் மரங்களை களைதல் அவசியம். நட்ட நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு வரிசை விட்டு அடுத்த வரிசை என மரங்களை அகற்ற வேண்டும். மீண்டும் எட்டாம் ஆண்டின் இறுதியில் மரங்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைக்கப்பட வேண்டும். அதாவது ஆயிரம் மரங்கள் நடந்த்தில் நான்கு ஆண்டுகள் கழித்து 500 மரங்களும், அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து 250 மரங்களும் அகற்றப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீதமுள்ள 250 மரங்களை மூன்றாம் மற்றும் நான்காம் களைப்புகளில் மரங்களின் தரத்தை பொறுத்து களைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
காய்ந்த, நோய் தாக்கிய, வளைந்த, வளர்ச்சி குன்றிய பக்கவாட்டுக் கிளைகளைக் கொண்ட தண்டு சீரில்லாத மரங்களை அகற்ற வேண்டும். இவ்வாறு ஏக்கருக்கு ஆயிரம் மரங்களாக நடப்பட்டு 25 ஆண்டு இறுதியில் சுமார் நூறு நூத்தி இருபது மரங்களாக குறைக்கப் படுகின்றன. இம்மரங்கள் சுமார் 40 சென்டிமீட்டர் சுற்றளவு அடையும்போது வெட்டுக்கு தயாராகி விடுகின்றன.
மேற்குறிப்பிட்ட களைப்புகளின்போது அகற்றப்படும் மரங்களும் இறுதியாக வெட்டப்படும் மரங்களும் 90 சென்டி மீட்டருக்கு குறைவான சுற்றளவு கொண்டிருந்தால் அவை கழிகள் என்றும், 90 சென்டி மீட்டருக்கு மேல் இருந்தால் அவை தடிமரம் என்றும் வரையறுக்கப் படுகின்றன. நாலாம் களைப்பிலிருந்து சுமார் 25 கன மீட்டர் உள்ள மரங்கள் கிடைக்கப்பெறும் மரங்களின் வளர்ச்சியை பொறுத்து 20 முதல் 40 ஆண்டுகளுக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு பயன்பெறலாம். 15 வருடங்களுக்கு முன்பு வீட்டருகில் வளர்க்கப்பட்ட ஒரே ஒரு தேக்கு மரம் 30 ஆண்டுகள் கழித்து ரூபாய் 60 ஆயிரத்திற்கு விலை போனதை காண முடிந்தது.
பயன்கள்:
தேக்கு மரம் வீடு கட்டுவதற்கும் பல்வேறு வகையான மரச்சாமான்கள் செய்வதற்கும் அதிக அளவில் பயன்படுகிறது.
தேக்கு மரம் கட்டுமான நிறுவனங்களில் உள்கட்ட அமைப்பையும் தரைப்பகுதியை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
தடி மரக்கழிகள் பல்வேறு வேலைகள் கட்டமைப்பதற்கும் வாழை மரங்களுக்குப் பூட்டாகவும் கட்டுமான நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
தேக்கு மரங்கள் ரயில்வே பெட்டிகள் தயாரிப்பதற்கும், பாதுகாப்பு சாதனங்கள் செய்வதற்கும், கப்பல் கட்டுமான தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பேருந்து மற்றும் சரக்கு ஊர்திகள் உற்பத்தி செய்யும் கட்டுமான நிறுவனங்களில் பயன்படுகிறது.
தேக்கு மரங்களில் இருந்து பெறக்கூடிய இயற்கை சாயம் காகிதம் மற்றும் பாய் தயாரிக்கும் நிறுவனங்களில் பயன்படுகிறது.
தேக்கு மர கழிவுகள் எரிகட்டி தயாரிப்பதற்கு பயன்படுகிறது.
தேக்கு மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய மரத் துகள்கள் மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அனுபவக் குழுவின் விளம்பரங்கள் தேக்கு மரத்தை வளர்க்கச் சொல்லி ஊக்கப்படுத்தியதன் காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா. இவ்வளவு லாபங்களை அள்ளித்தரும் மரங்களை முடிந்தவர்கள் வளர்த்து பயனடையலாம்.