

சீந்தில் கொடி "அமிர்தவல்லி" என்றும் அழைக்கப்படும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை. இது சித்த வைத்தியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீந்தில் என்பது மரங்களில் சுற்றி படரும் ஒரு மூலிகை தாவரமாகவும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்று மூடி இருக்கும். மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடி இருக்கும். இலைகளை இதய வடிவில் இருக்கும் இதை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்துவிட்டாலும் உலர்ந்து போகாது. காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழும் திறன் உடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேர் ஊன்றி கொண்டு கொண்டு பூமியில் இருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.
சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. 'வல்லி' என்றால் 'கொடி' என்ற பொருளில் கொடி வகையான சீந்திலுக்கு அமிர்தவல்லி என்னும் பெயரும், அமிர்தம் என்றால் 'அழியாத தன்மையைக் கொடுக்கும்' என்ற பொருளில் 'அமிர்தை ' என்னும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவ பயன்கள்
சீந்தில் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகி பயன்படக்கூடிய குணம் கொண்டது. செரிமானமின்மை, வலி சோர்வை குணமாக்கும்.
தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. காய்ச்சலை தீர்க்கவும், வீக்கத்தை கரைக்கக் கூடியது. மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தரக்கூடியது. ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடியது. கல்லீரலை பலப்படுத்தக் கூடியது.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறு ஆகியவைகளுக்கு கொடுக்கப்படுகிறது. நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும்.
இது சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் எழுதியுள்ளார். சீந்தில் கொடிகளை நன்றாக காயவைத்து பொடி செய்து காலை, மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
சீந்தல் கொடியிலிருந்து உருவாக்கப்படும் சீந்தில் சர்க்கரை எனும் சித்த மருந்து தோல் நோய் முதல் நீரிழிவு நோய் வரை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தது. தோல் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளில் சீந்தில் சர்க்கரையின் சேர்மானம் மருந்தை மேலும் வீரியமாக்கும்.
எலும்புகளுக்கு ஊட்டத்தை கொடுப்பதோடு எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறு நடை போட துணை நிற்கும். புற்று நோயின் தாக்கத்தை குறைக்கும்.
உள்ளங்கை, பாத எரிச்சலுக்கு சீந்தில் சூரணத்தை தண்ணீரிலிட்டு பருகினால் எரிச்சல் நீங்கும்.
இதனை எடுக்கும்போது சித்த மருத்துவரின் ஆலாசனை கேட்டு செய்யவும்.