

வீட்டு தோட்டத்தில் மல்லிகைச் செடி, ரோஜா செடி அதிகம் வளர்ப்பதில் பெண்கள் மிகவும் ஆர்வம் கொள்வர். ஏனெனில் மல்லிகையின் மணமும் ரோஜாவின் அழகும் அனைவரையும் கவர்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டு முழுவதும் மல்லிகை செடி பூத்துக் குலுங்குவதற்கு செய்ய வேண்டியவை குறித்து இப்பதிவில் காண்போம்.
1. மண் கலவை:
செம்மண், வண்டல் மண் கலந்த கலவையே மல்லிகைச் செடி வளர்க்க சிறந்தது. வேர் வளர்ச்சி தடைப்படாமல் செல்வதற்கு தொட்டிகளில் வளர்க்கப்படும் போது தேங்காய் நார் மற்றும் சிறிய கற்கள் வைக்கும் போது காற்றோட்டம் அதிகரித்து வடிகால் வசதி ஏற்பட்டு அதிக நீர் தேங்காமல், வேர் அழுகல் தடுக்கப்பட்டு செடி நன்கு வளரும். மேலும், பெரிய தொட்டிகளில் மாற்றும்போது செடி விரைவாக வளர உதவி புரியும்.
2. கவாத்து (Pruning):
மல்லிகை செடிக்கு கவாத்து செய்வது மிக முக்கிய பராமரிப்பாகும். ஏனெனில் அதிகமாக வளரும் செடிகளை நுனியில் வெட்டி விடுவதால் பக்கவாட்டு கிளைகள் அதிகரித்து இந்த கிளைகளில் அதிக மொட்டுக்கள் உருவாகும்.
பழைய கிளைகளை நீக்கி விட்டால் புதிதாக துளிர்விடும் வாய்ப்பு அதிகரித்து அதிக மொட்டுக்கள் உருவாகி நல்ல விளைச்சல் தரும். புதிய துளிர்கள் சுத்திகரிப்பு செய்த ஒரு சில வாரங்களில் உருவாகும்.
3. இயற்கை உரம் பயன்படுத்தும் முறை:
மண்ணின் ஊட்டச்சத்தை அதிகரிக்க கருப்பு உளுந்தம் பொடி, வெந்தயம், கடுகு போன்றவற்றை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அரைத்து விட வேண்டும். ஏனெனில் மல்லிகை செடிக்கு இயற்கை உரம் பயன்படுத்தும் கால இடைவெளியும் அளவு முக்கியமாகும்.
நீண்டகால மண்ணின் சத்து அதிகரிக்க காய்கறி கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்த வேண்டும். இயற்கை பூச்சி எதிர்ப்பு சக்திக்கு வேப்பம் புண்ணாக்கு, வெங்காயத்தோல், எலுமிச்சை தோல் ஆகியவற்றை ஊற வைத்து தயாரிக்கும் கரைசலை தெளிக்க வேண்டும். மேலும் மண்வளத்தை அதிகரிக்க டீத் தூள் மற்றும் காபி தூளை காய வைத்து மண்ணில் சேர்க்க வேண்டும்.
4. மொட்டுக்களை அதிகரிக்கச் செய்யும் தேமோர் கரைசல்:
புளித்த மோரையும் தேங்காய் பாலையும் சரியான அளவில் கலந்து தயாரிக்கப்படும் கரைசலை தண்ணீருடன் கலக்கி தயாரிக்கப்படும் தேமோர் கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
இதனால் செடிக்கு விரைவாக ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு மொட்டுக்கள் அதிகரித்து பூவின் பெருக்கம் உயர்கிறது. ஏனெனில் தேமோர் கரைசல் சிறந்த இயற்கை ஊட்டச்சத்தாக கருதப்படுவதால் வாரத்திற்கு அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மல்லிகைச் செடியில் பயன்படுத்த பலன் அதிகம் கிடைக்கும்.
5. சூரிய ஒளி:
தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் மல்லிகை செடி ஆரோக்கியமாக வளரும் என்பதால் அத்தகைய இடங்களில் செடி வளர்ப்பது நல்லது. அதிக நிழல் உள்ள இடங்கள் பூக்களின் வளர்ச்சியை குறைத்து இலை வளர்ச்சியை மட்டும் அதிகரிக்கும். நீர் தேங்கி நிற்காத அளவு மண் ஈரமாக இருக்க வேண்டும் என்பதை மல்லிகை செடி வளர்ப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. கூடுதல் உரம்:
மாதத்திற்கு ஒரு முறை வேர் வளர்ச்சியை தூண்டவும், மொட்டுக்களை அதிகரிக்கவும் மாட்டுச்சாண உரம் அல்லது வெர்மி கம்போஸ்ட் உரத்தை சரியான அளவில் மல்லிகைச் செடிக்கு இடவேண்டும். ரசாயன உரமான டிஏபி உரம் அதிக அளவில் பயன்படுத்தினால் செடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
சிறிது கவனத்தோடும் சரியான பராமரிப்போடும் அளவான இயற்கை உரங்களின் பயன்பாடு இருந்தால் மல்லிகைச் செடி ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும்.