

மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் 'மனசுக்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கிறது' என்ற சொற்றொடரை தான் உதாரணமாக கூறுவார்கள். மகிழ்ச்சிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் ஒரு ஈர்ப்பு உள்ளது. அந்த வகையில் பால்கனியில் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையை ஈர்த்து பூங்கா போல மாற்றும் பால்கனி தோட்டச் செடிகள் மற்றும் குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்
1. லாவண்டர்:
நாளொன்றுக்கு 6 மணி நேர சூரிய ஒளி தேவைப்படும் இடங்களில், மண்ணில் தண்ணீர் தேங்காதவாறு பராமரித்தால் எளிதாக வரும் வளரும் லாவண்டர் செடி. இதில் உள்ள ஊதா நிற பூக்களின் இதமான நறுமணம் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தமானவை. மேலும் லாவண்டர் செடியின் நறுமணம் மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. பட்டாம்பூச்சி புஷ்:
'வண்ணத்துப்பூச்சிகளின் காந்தம்' என்று அழைக்கப்படும் பட்டாம்பூச்சி புஷ் செடிகள் பெரிய புதர் போல வளருவதால் பெரிய தொட்டிகளில் பால்கனியில் வளர்ப்பதோடு, புதிய கிளைகள் பூக்கள் உருவாக கவாத்து (pruning) செய்வது முக்கியமாகும். இச்செடி பூக்களின் வாசனை வண்ணத்துப்பூச்சிகளை பால்கனியை நோக்கி சுலபமாக இழுக்கும் தன்மை கொண்டது.
3. மில்க் வீட்:
நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் மில்க் வீட் செடிகள் செழித்து வளரக்கூடியவை. மேலும் மில்க் வீட் செடிகளின் இலைகள் மட்டுமே வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிட்டு புழுக்கள் (Caterpillars) வளர்வதற்கு தேவையான உணவாக பயன்படுவதால் புழுக்கள் இலைகளை சாப்பிட்டாலும் கவலைப்பட தேவையில்லை.
4. பர்பிள் கோன்ஃபிளவர்:
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே தண்ணீர் தேவைப்படும். வறட்சியை தாங்கக்கூடிய பர்பிள் கோன்ஃபிளவர் செடிகளின், பெரிய இதழ்களுடன் கூடிய வட்ட வடிவமான மலர்களின் மையப் பகுதியில் அதிகப்படியான தேன் நிறைந்து இருப்பதால் வண்ணத்துப்பூச்சிகள் நீண்ட நேரம் அமர்ந்து தேன் குடிக்க விரும்பும்.
5. சால்வியா:
பால்கனி தொட்டிகளில் வளர்க்க ஏதுவான சால்வியா செடிகள் நீண்ட குச்சிகள் போன்ற அமைப்பில் பூக்கும் பூக்களை கொண்டுள்ளன. வண்ணத்துப்பூச்சிகளை வெகு தொலைவில் இருந்தே கவர்ந்திழுக்கும் தன்மையை சால்வியாவின் சிவப்பு ஊதா மற்றும் நீல நிற மலர்கள் கொண்டுள்ளன.
6. மேரி கோல்ட்:
மிதமான தண்ணீரும், நல்ல சூரிய ஒளியும் இருந்தால் வேகமாக வளரக்கூடிய சாமந்தி செடிகள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு பிடித்த தாவரமாகும்.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி பூக்கள் கொண்டுள்ளதால் பால்கனிக்கு கூடுதல் அழகைக் கொடுப்பதோடு, வண்ணத்துப்பூச்சிகளை ஈர்த்து தேவையில்லாத பூச்சிகளை வரவிடாமலும் தடுக்கின்றன.
7. செடம்:
பால்கனியில் வெயில் படும் இடங்களில் இந்த சதைப் பற்றுள்ள (Succulent) தாவரத்தை எளிதாக வளர்க்கலாம். இதற்கு குறைந்த தண்ணீர் தேவைப்படும். மற்ற பூக்கள் குறைவாக இருக்கும் கோடை காலத்தின் இறுதிப் பகுதியிலும், இலையுதிர் காலத்திலும் அதிகமான பூக்கள் இருப்பதால், சிறந்த உணவாதாரமாக வண்ணத்துப்பூச்சிகளுக்கு இருக்கின்றன.
பால்கனியில் வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்க கூடுதல் தகவல்கள்:
உரம்:
வண்ணத்துப்பூச்சிகளின் புழுக்களை பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் அழித்துவிடும் என்பதால் அவற்றிற்கு பதிலாக மண்புழு உரம், தொழு உரம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் வசதி:
வண்ணத்துப்பூச்சிகள் கற்களின் மீது அமர்ந்து தண்ணீர் குடிக்க ஏதுவாக ஒரு சிறிய தட்டு அல்லது அகல் விளக்கில் கூழாங்கற்களை போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
வெயில் படும் இடம்:
வண்ணத்துப்பூச்சிகள் குளிர் ரத்தம் (cold - blooded) கொண்டவையாக இருப்பதால் சிறகடிக்க சூரிய வெப்பம் தேவை. எனவே வெயில் உள்ள திசையில் செடிகளை வளர்த்தால் பால்கனியைச் சுற்றியே வண்ணத்துப்பூச்சி எப்பொழுதும் வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.