ஆண்டுக்கு இருமுறை பின்னோக்கிப் பாயும் ஆறு! இது இயற்கையின் மாயமா?

Tonle Sap river
Tonle Sap river
Published on

யற்கை அன்னை மனிதர்களுக்கு வழங்கிய கொடைகளில் கம்போடியாவின் டான்லி சேப் (Tonle Sap) நதி மட்டும் ஆண்டிற்கு இருமுறை தனது ஓட்டத்தின் திசையை மாற்றிக்கொண்டு வியப்பளிக்கிறது. மீகாங் ஆற்றின் கிளை ஆறான இது, பல லட்சம் உயிரினங் களுக்கும், மக்களுக்கும் வாழ்வாதாரமாகத் திகழும் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் மண்டலமாகும். இந்த நதியின் அபூர்வமான ஓட்டம் மற்றும் அதன் செழுமையான சூழலியல் சிறப்புகளை காண்போம்.

திசை மாறும் அதிசயம்: கோடைக்காலத்தில் (நவம்பர் முதல் மே வரை) டான்லி சேப் நதி, ஏரியிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி ஓடி மீகாங் (Mekong) ஆற்றில் கலக்கிறது.

மழைக்காலம் (ஜூன் முதல் அக்டோபர் வரை) மீகாங் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அந்த நீரின் அழுத்தம் அதிகமாகி டான்லி சேப் நதியைத் திருப்பி விடுகிறது. இதனால் நதி பின்னோக்கி (வடக்கு நோக்கி) பாய்ந்து டான்லி சேப் ஏரியை நிரப்புகிறது.

ஏரியின் உருமாற்றம்: நதி பின்னோக்கிப் பாய்வதால், டான்லி சேப் ஏரி மிகப்பெரிய அளவில் விரிவடைகிறது. சுமார் 2,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி, மழைக்காலத்தில் 16,000 சதுர கிலோமீட்டர் வரை (சுமார் 6 மடங்கு) விரிவடையும். ஏரியின் ஆழம் 1 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை உயரும்.

முக்கியத்துவம்

மீன் வளம்: நீர் இடமாற்றத்தின் போது லட்சக்கணக்கான மீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏரிக்குச் செல்கின்றன. இது உலகிலேயே அதிக நன்னீர் மீன் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வாழ்க்கை முறை: இங்குள்ள மக்கள் தண்ணீரின் மட்டத்திற்கு ஏற்ப மிதக்கும் வீடுகளிலும், உயரமான தூண்களில் கட்டப்பட்ட வீடுகளிலும் வசிக்கிறார்கள்.

பாதுகாப்பு: மீகாங் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளத்தை இந்த ஏரி தனக்குள் உறிஞ்சிக்கொள்வதால், கீழ்நிலைப் பகுதிகள் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
காட்டைக் காக்கும் விந்தைப் படை: ஸ்பெயினின் ‘தீயணைப்பு’ கழுதைகள்!
Tonle Sap river

கம்போடிய மக்கள் இந்த நதி திசை மாறுவதைக் கொண்டாட ‘பான் ஓம் டுக்’ (Bon Om Touk) என்ற புகழ்பெற்ற நீர் திருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறார்கள்.

டான்லிசேப் நதியின் சுற்றுச்சூழல்: இந்த நதியின் திசை மாற்றத்தால் மழைக்காலத்தில் ஏரி விரிவடையும்போது, சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் காடுகள் நீரில் மூழ்குகின்றன. இவை ‘மூழ்கிய காடுகள்’ (Flooded Forests) என்று அழைக்கப்படுகின்றன. இந்த காடுகள் மீன்கள் முட்டையிடுவதற்கும், குஞ்சுகள் வளர்வதற்கும் பாதுகாப்பான இடமாகத் திகழ்கின்றன. இக்காடுகள் அரிக்கப்படுவதைத் தடுத்து, ஏரியின் கரைகளை உறுதிப்படுத்துகின்றன.

உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்வளம்: மீகாங் நதியிலிருந்து வரும் ஊட்டச்சத்து நிறைந்த வண்டல் மண், ஏரியில் உள்ள பாசிகள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வாழ்கின்றன. உலகிலேயே ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிக மீன்கள் கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. இப்பகுதி கம்போடியாவின் 60% புரதத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

அரிய வகை உயிரினங்கள்:

கூழைக்கடா, கொக்குகள் மற்றும் பல அரிதான நீர்வாழ் பறவைகளுக்கு இது புகலிடம். உலகின் மிகப்பெரிய நன்னீர் பாம்புகள் மற்றும் அரிய வகை ஆமைகள், ராட்சத கெளுத்தி என்ற மீன் வகை இங்கு காணப்படுகின்றன.

சவால்கள்: மீகாங் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளால் நீரோட்டத்தின் வேகம் குறைந்து, டான்லி சேப் நதி பின்னோக்கிப் பாயும் இயற்கை நிகழ்வு பாதிக்கப்படுகிறது. மிதக்கும் கிராமங்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் நீரின் தரத்தைப் பாதிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
"வெறும் பாறைகள் அல்ல, இவை உயிரினங்களின் புகலிடம்! கிரேட் பாரியர் ரீஃப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"
Tonle Sap river

டான்லி சேப் நதி கம்போடியாவின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் உயிர் பன்முகத்தன்மையின் முதுகெலும்பாகும். இயற்கையாகவே திசை மாறும் அதன் பண்பு, அந்தப் பிராந்தியத்தின் மீன் வளத்திற்கும், நீர் சமநிலைக்கும் இன்றியமையாதது. உலகின் இந்த அரிய பொக்கிஷத்தைப் பாதுகாப்பது, எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையாகும். இயற்கையோடு இயைந்த வாழ்வியலை டான்லி சேப் நமக்கு இன்றும் பாடம் புகட்டிக்கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com