
டூன் மரம், துணு மரம் என்று சந்தன வேம்பை அழைப்பதுண்டு. இதன் சிறப்பியல்புகளையும், பயன்பாடுகளையும் பற்றி இப்பதிவில் காண்போம்.
இடங்கள்:
இந்தியா, சீனா, பங்களாதேஷ், கம்போடியா, மலேசியா, மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இயற்கையாக அதிக அளவில் காணப்படும் டூன் மரம் ஆஸ்திரேலிய கென்யா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மரம் ஆகும். சந்தன வேம்பு பற்றிய ஆராய்ச்சிகள் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரில் மேற்கொள்ளப்பட்டு சுமார் 30 வகையான ரகங்கள் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் சந்தன வேம்பு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் மூன்று வருடத்தில் சுமார் 5 மீட்டர் உயரமும் 15 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டு வளர்ந்து வருகின்றது. ஆதலால் சந்தன வேம்பு மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தட்பவெப்பம்:
வெப்பமண்டல காடுகளில் மிகுதியாக காணப்படக்கூடிய இம்மரத்தை ஈரப்பதம் மிக்க இடங்களான ஆற்றோரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் நன்கு வளரும் வெப்பநிலை உள்ள பகுதிகளில் காணப்படும் இம்மரம், இலை உதிர்க்க கூடிய உயரமாக வளரும் தன்மை உடையது.
இலை:
இலைகள் ஈட்டி வடிவமாகவும், கூறிய முனைகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. இலை காம்பின் நீளம் 0.3 முதல் 13 சென்டிமீட்டர் வரையில் வேறுபடுகின்றது.
பூக்கள்:
டூன் மரத்தின் பூக்கள் பொதுவாக இலைகளைவிட சிறியதாக காணப்படுகின்றன. மரத்தின் பக்க கிளைகளில் தொங்கும் பூக்களின் அடிப்பகுதியில் புல்லி இதழானது பிரிந்து காணப்படுகிறது. பூக்களின் இதழ்கள் 5 மில்லி மீட்டர் நீளமுடையதாகவும் முட்டை அல்லது நீள் சதுர வடிவம் உடையதாகவும் உள்ளன.
விதை:
விதைகள் கடின விதை உறை அமைப்பைக் கொண்டு காணப்படுகின்றது. 90% முளைப்பு திறன் கொண்ட விதைகள் ஒரு கிலோ 280000 முதல் 425000 வரை இருக்கும், விதையுறையின் வெளிப்பகுதியானது மென்மையான தோற்றம் கொண்டதாக இருக்கும். இம்மரத்தின் கனிகள் ஆண்டு முழுவதும் காணப்படும். விதை பரவுதல் காற்றின் மூலம் நடைபெறுகின்றது.
உற்பத்தி தொழில்நுட்பம்:
சந்தன வேம்பு நாற்றுக்களை மிகவும் எளிதாக விதைகள் மூலம் உற்பத்தி செய்யமுடியும். விதை மூலம் உற்பத்தி செய்வதற்கு 10 மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் 30 சென்டிமீட்டர் உயரம் உள்ள அளவிற்கு தாய் பாத்திகளை உருவாக்கி அதில் 80 முதல் 100 கிராம் அளவுள்ள விதைகளை தூவி விடவேண்டும். தூவிய பிறகும் ஆற்று மணலைக் கொண்டு லேசாக மூடிவிட வேண்டும். பின்பு ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர்விட எட்டாவது நாள் முதல் முளைக்க ஆரம்பிக்கும். ஒரு அடி உயரமுள்ள நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தலாம்.
மேலாண்மை:
நன்கு வளர்ச்சி அடைவதற்கு மரத்துக்கு குறைந்த அளவு சூரிய ஒளியே போதுமானது. நாற்றுக்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து, அடர் நடவு செய்து, நான்கு வருடங்கள் கழித்து மர நீக்கம் செய்தால், நல்ல வளர்ச்சி உடைய மரங்கள் ஒன்பது முதல் 12 மீட்டர் உயரம் வரையும் வளரும்.
பயன்கள்:
தென்கிழக்கு ஆசியாவில் இம்மரத்தின் இலைகளை கீரையாகப் பயன்படுத்துகிறார்கள். கால்நடைகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம். பங்களாதேஷ் நாட்டில் இம்மரத்தை தேனி மரம் என்று அழைக்கின்றனர்.
மரக்கட்டைகள்:
இம்மரத்தின் வெளிக்கடையானது இளஞ்சிவப்பு கலந்து வெண்மையாகவும், நடுக்கட்டையானது வெளிர் பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. மரக்கட்டைகளின் தகவமைப்பு மிதமான அடர்த்தியுடையதாய் உள்ள மரக்கட்டைகள் நறுமணம் கொண்டவை ஆகும்.
இம்மரம் கப்பல் கட்டுமானம், கட்டுமான தொழில், சிகரெட் பெட்டிகள், தீக்குச்சி தொழிற்சாலை, அலங்கார பயன்பாடுகள் ,மரச்சாமான்கள், இசைக்கருவி தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
சாயப் பொருட்கள்:
இதன் பூக்கள் சிவப்பு நிற சாயம் பெற்று காணப்படுகின்றன .ஜவுளி தொழிற்சாலைகளில் சாயப்பொருளாக பூக்கள் பயன்படுகின்றன. வாசனையுடன் கூடிய எண்ணெய் இம்மரத்தின் கனிகளில் இருந்து பெறப்படுகின்றது.
மருத்துவ பயன்கள்:
மரப்பட்டைகள் மருந்து பொருளாகவும், வயிற்றுக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகவும் பயன்படுகின்றது. சந்தன வேம்பு மரங்களை தடி மரப்பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம்.