Valmik Thapar: தன் இறுதி மூச்சு வரை புலிகளுக்காகவே வாழ்ந்த மனிதர்!

Valmik Thapar
Valmik Thapar
Published on

இந்தியாவின் புலி மனிதன் என்று அழைக்கப்படும் வால்மிக் தாப்பர் ஒரு புகழ்பெற்ற இயற்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் திரைப்படப் தயாரிப்பாளர். தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்தார். மே 31ஆம் தேதி, தனது 73 வயதில் காலமான தாப்பர், தன் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு புலிகளின்பால் பேரன்பு கொண்டிருந்தார் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

புலிகளின் மீது பேரன்பு:

வால்மிக் தாப்பர் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக மட்டும் கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை புலி என்பது ஒரு கம்பீரமான சுவாசிக்கும் சக்தி உள்ள அதே சமயத்தில் ஆபத்தில் உள்ள இன்றியமையாத ஒரு உயிரினம். புலியின் உள்ளார்ந்த பிரம்மாண்டத்தின் மீது தாப்பர் மிகுந்த பிரமிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். புலியின் சக்தி, அழகு, ஆதிக்கம், தனித்துவமான இயல்பு ஆகியவற்றை அவர் பெரிதும் கொண்டாடினார்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட அற்புதமான உயிரினமான புலிகள், வேட்டையாடுதல் காரணமாக வாழ்விட இழப்பு மற்றும் மனித வனவிலங்கு மோதல் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று அறிந்தார். இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு புலி மிகவும் முக்கியமானது என்று தாப்பர் நம்பினார். புலிகள் இல்லாவிடில் இயற்கையின் நுட்பமான சமநிலை சரிந்து பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மனித நல்வாழ்வில் கூட எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தார்.

புலியுடன் முதல் சந்திப்பு:

தாப்பர் 1976ல் தனது 24ஆம் வயதில் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற போது, ஒரு காட்டுப்புலியை தற்செயலாக சந்தித்ததும், புலிகள் காப்பகத்தின் இயக்குனரான ஃபதே சிங் ரத்தோருடன் ஏற்பட்ட சந்திப்பும் புலிகளைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை மாற்றியது. ‘காட்டுப்புலியின் கண்களை ஒரு முறை பார்த்த பிறகு ஒருவரால் முன்பு போல இருக்க முடியாது’ என்கிறார் தாப்பர்.

அறக்கட்டளை:

1987ல் தாப்பர் ரந்தம்பூர் அறக்கட்டளையை ரத்தோருடன் இணைந்து நிறுவினார். இது உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வோடு, புலிகள் பாதுகாப்பு முயற்சிகளை இணைக்க பணியாற்றிய ஒரு முன்னோடி அமைப்பாகும். இந்த அறக்கட்டளை சுகாதாரம், கல்வி, பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாரம்பரிய கைவினைகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. காடுகளை பாதுகாப்பது, மனித வாழ்க்கையை மேம்படுத்துவது என்கிற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உலக புத்தக தினம் - நம் வாழ்க்கையை அழகாக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம்
Valmik Thapar

புத்தகங்கள்/ஆவணப் படங்கள்:

தாப்பர் புலிகளைப் பற்றி 30 புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘புலிகளின் நிலம்; இந்திய துணை கண்டத்தின் இயற்கை வரலாறு, புலி தீ, இந்தியாவில் புலிகளின் 500 ஆண்டுகள், புலிகளுடன் வாழ்வது, புலிகளின் ரகசிய வாழ்க்கை’ போன்ற பாராட்டப்பட்ட தலைப்புகளில் எழுதியுள்ளார்.

பிபிசி, டிஸ்கவரி சேனல் மற்றும் அனிமல் பிளானட் ஆகியவற்றிற்காக சர்வதேச அளவில் ஒளிபரப்பப்படும் பல ஆவணப் படங்களை அவர் இணைந்து தயாரித்து வழங்கினார். ரந்தம்பூரில் புலிகளைக் கவனித்த 50 ஆண்டுகால அனுபவத்தை விவரிக்கும் பிபிசி தொடர் ‘லேண்ட் ஆப் த டைகர்’ பலராலும் பாராட்டப்பட்ட வனவிலங்கு ஆவணப் படமாகும்.

பரிந்துரைகள்:

புலிகள் இனம் மெல்ல மெல்ல அழிந்து வருவதை கண்டு மனம் வருந்திய தாப்பர் அவற்றை பாதுகாப்பது குறித்து எண்ணற்ற பரிந்துரைகளை வழங்கினார். புலிகள் செழித்து வளர, எந்தவிதமான மனித இடையூறும் இல்லாத பாதுகாப்பான இடம் தேவை என்று நம்பினார். வனப்பகுதி மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு கிராமங்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, காடுகளுக்கு பதிலாக தோட்டங்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு மெக்னீசியம், குரோமியம், செலினியம்: அறிவியல் பலன்கள்
Valmik Thapar

முறையான அறிவியல் பயிற்சி இல்லாத போதும் தாப்பர் இந்திய வனவிலங்கு பாதுகாப்பில் ஒரு வலிமையான குரலாக மாறினார். 150க்கு மேற்பட்ட அரசுக் குழுக்களில் பணியாற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் புலிகளுக்காகவே வாழ்ந்து மறைந்த அந்த அரிய மனிதர் மே 31ஆம் தேதி செரிமானப் பாதையில் ஏற்பட்ட புற்றுநோயால் இந்த உலகத்தை விட்டு மறைந்தார். புலிகளைப் பற்றி எண்ணும் போது இந்த புலி மனிதனையும் இனிவரும் சமூகம் நினைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com