

முதுகெலும்பு உள்ள, பறக்கும் பாலூட்டி உயிரினம் வெளவால் மட்டுமே. உலகில் 1,300க்கும் மேற்பட்ட வௌவால் இனங்கள் வாழ்கின்றன. என்னதான் வெளவால்களுக்கு இறக்கைகள் இருந்து பறந்தாலும் இதை நாம் பறவையாகக் கருத முடியாது. இது பாலூட்டி வகுப்பைச் சேர்ந்ததால் இது ஒரு விலங்காகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வௌவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்குகின்றன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெளவால்கள் எலி போன்ற சிறிய முகம் உடையனவாகவும், ஒருசில வெளவால்கள் நரி போன்ற முகத்தை உடையனவாகவும் இருக்கின்றன. எலி போன்ற முக அமைப்பைக் கொண்ட வெளவால்கள் பூச்சிகளை உணவாக உண்ணக்கூடியவை. இன்னும் சில வெளவால்கள் உடல் பெரியதாகவும், நீண்ட முகத்துடனும் காணப்படும். இவை பழம் தின்னி வெளவால்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் முகம் நரியின் முகம் போன்று காட்சியளிக்கும். இந்த வெளவால்களை flying fox என்று அழைப்பார்கள்.
பழந்தின்னி வெளவால் பழத்தின் சாறை மட்டும் உறிஞ்சிவிட்டு, சக்கையை துப்பி விடுகிறது. இன்னும் சில வெளவால்கள் விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றன. இவ்வகையான வெளவால்கள் அமெரிக்காவில் உள்ள பெரிய காடுகளில் வாழும் விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன.
பகல் முழுவதும் மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வெளவால்கள் இரவு நேரத்தில் சூரியன் மறைந்ததும்தான் தன்னுடைய உணவை தேடிச் செல்லும். வெளவால்களின் கால்களுக்கு போதுமான வலிமை கிடையாது. அதன் உடல் எடையை தாங்கும் அளவிற்கு அதன் கால்களில் வலு இல்லை. மேலும், அதனுடைய இறக்கைகள் அதன் கால்களை விடப் பெரியதாக இருப்பதால், அவற்றால் அதன் உடலை தூக்கிக்கொண்டு தரையிலிருந்து மேல் எழும்பி பறக்க முடியாது.
அது மட்டுமின்றி, அதன் கால்களை தரையில் ஊன்றி சிறிது நேரம் கூட அதனால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. வளர்ச்சியற்ற கால்களும், கனமான உடல் இறக்கைகளும்தான் இதற்குக் காரணம். வெளவால் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு இருந்தால் அதனால் எளிதாகப் பறக்க முடியும். இதனால்தான் வெளவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன.
வெளவால்களால் 10,000 அடி உயரம் வரை பறக்க முடியும். வெளவால்களுக்கு கண்கள் இருந்தாலும் அவற்றால் பார்க்க முடியாது. இதனால்தான் வெளவால்கள் பறந்து செல்லும்போது மீயொலியை எழுப்புகின்றன. இந்த ஒலியின் மூலம் குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களை சுலபமாகத் தெரிந்து கொண்டு அந்த பொருளின் மீது மோதாமல் விலகி சென்றுச் விடுகின்றன.
வௌவால்கள் 30 வருடங்களுக்கும் மேல் வாழும். வௌவாலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 1,000 முறை துடிக்கும். வௌவாலின் கழிவில் குவானோ என்று அழைக்கப்படும் ஒரு பொருள் இருப்பதாகவும், இதை ஒருசில விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளவால் கடித்துவிட்டால் வெறி நாய் கடியால் உண்டாகும் வைரஸான ரேபிஸ் நோய் ஏற்படும்.
சங்கீதா