இந்திய சூழலுக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்!

உணவே மருந்து
உணவே மருந்து

ரோக்கியம் என்பதன் உண்மையான அடையாளம் எது தெரியுமா? நோயின்றி இருப்பதோ அல்லது பலவீனம் இல்லாமல் தெம்பாக இருப்பதோ மட்டுமல்ல. உடல், மனம், சமூக வாழ்க்கை எல்லாவற்றிலுமே நலத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதே ஆகும்.

உடல் நலத்திற்கு அடிப்படை நம் உணவு என்பது அனைவருக்குமே தெரியும்.

பொதுவாக நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் (Tropical) ஏராளமான காய்களும் கனிகளும் விளையும்.

மேற்கத்திய குளிர் நாடுகளில் ஆடு மாடு போன்ற கால்நடைகள் அதிகம் உணவுக்காகவும், பால் பொருட்களுக்காகவும் (Dairy Products) வளர்க்கப் படுகின்றன.

நம் நாட்டிலேயே கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளில், தேங்காய், மீன், அரிசி காய்கறிகள் போன்றவையும், வட மாநிலங்களில் கோதுமை, பால், பால் பொருட்கள், சோளம், கடுகு எண்ணைய் போன்றவையும் அதிகம் கிடைக்கின்றன; உண்ணப்படுகின்றன. பருப்பு வகைகள், அரிசி, சோளம் உட்பட இந்தியா முழுவதும் பரவலாக உண்ணப்படும் வகைகளும் உண்டு.

‘உணவே மருந்து’ என்பதற்கேற்ப காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், மீன் இறைச்சி என்று உணவில் சேர்த்துக்கொள்கிறோம்.

இருந்தாலும் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நலம் காக்கும், (Boosting Immunity and Well-being), இந்தியச் சூழலுக்கு ஏற்ற எளிய சூப்பர் உணவுகள் ஏதேனும் பத்து சொல்ல முடியுமா என்று சத்துணவு நிபுணர் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.

தாரிணி கிருஷ்ணன்...
தாரிணி கிருஷ்ணன்...

1. ஆப்பிளை விட 9 மடங்கு அதிகம் விட்டமின் சி கொண்ட நெல்லிக்காயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. ஆப்பிளைச் சொல்வதுபோல தினம் நெல்லிக்காய் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டாம்.

2. நாம் வீட்டில் தயார் செய்யும் பானகத்தில் இரும்புச்சத்து, எலுமிச்சையின் விட்டமின் சி, ஏலக்காயில் உள்ள சத்துக்கள் எல்லாம் இணைந்து கிடைக்கிறது. பண்டைய நாட்களில் இருந்தே வயிறு, சிறுநீரகம், நுரையீரல் நோய்களுக்கான மருத்துவத்தில் ஏலக்காய் முக்கியமானதாக பயன்பட்டு வருகிறது.

3. முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீடாகரோடின்(beta-carotene), ஆன்டியாக்ஸிடென்ட் (anti oxidant) உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

4. பப்பாளிப் பழம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஏற்ற பழம். மலச்சிக்கலைத் தடுக்கும். ஜீரணசக்திக்கு உதவும். பபாயின் என்ற என்சைம் இதில் உள்ளது. சருமப் பாதுகாப்புக்கு உகந்தது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆன்டிகேன்சர் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீடாகரோடின், கொண்டது பப்பாளி.

5. அன்றாடம் நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை எல்லாமே காணப்படுகிறது.

6. பருப்பு வகைகள் எல்லாமே புரோட்டீன் சத்து கொண்டவை என்றாலும், பயத்தம் பருப்பு எளிதில் ஜீரணமாகிவிடும். அதில் எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய் கலந்து கோசுமல்லிபோல் சாப்பிடும்போது விட்டமின் சி உடலில் சேரும்.

7. பால் ஒரு ஹை பையலாஜிகல் வேல்யூ (High Biological Value) கொண்ட முழு உணவு. இதில் இருக்கும் கால்சியம், பாஸ்ஃபரஸ் சத்துக்கள் நேரடியாக நம் எலும்புகளுக்கு வலு தருகிறது. இதில் நிறைய விட்டமின் டி சத்தும், புரோட்டீனும் இருப்பதால் உடல் வலுப்பெறும். நம் நாட்டில் பொதுவாக புரதச் சத்துக் குறைபாடு காணப்படுகிறது, அதற்கு பால் உட்கொள்வது நல்ல தீர்வு.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியில் திளைக்கும் பின்லாந்து நாடு பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்...!
உணவே மருந்து

8. தயிரில் காணப்படும் ப்ரோபயாடிக்ஸ் (Probiotics) மற்றும் 30,000 வகை நல்ல பேக்டீரியாக்களும் உடலுக்கு நன்மை தருபவையே.

9. புரதச் சத்து நிறைந்த சோயா பொருட்களில் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 அமிலச் சத்து, கார்போஹைடிரேட், நார்ச்சத்து போன்றவை உள்ளன.

10. நாம் வீடுகளில் ஊறுகாய் போடும் நார்த்தங்காய், கிடாரங்காய் இவற்றின் தோலில் அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. அவற்றை அப்படியே தோலோடு ஊறுகாய் போடுவதால் அந்த சத்துக்கள் உடலில் சேர்கின்றன.

இவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்து நலமாக வாழ்வோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com