
கருப்பட்டி பணியாரம்
தேவை:
நீரில் ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் காய வைத்து எடுத்த பச்சரிசி மாவு - 2 கப்
கருப்பட்டி பொடித்தது - அரை கப்
வெல்ல பொடி - அரை கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
பச்சரிசி மாவை சலித்து வைக்கவும். வெல்லத் தூளையும், கருப்பட்டி பொடியையும் சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அதை கம்பி பாகாக காய்ச்சி, மாவில் ஊற்றி, சிறிது நெய் சேர்த்து மூடி வைக்கவும். ஆறியதும், சிறிது சிறிதாக நீர் விட்டு, தோசைமாவு பதத்தில் கரைக்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி, வெந்ததும் கம்பியால் திருப்பி போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். பாரம்பரியமான, சுவையான பணியாரம் இது.
உப்பு பணியாரம்
தேவை:
பச்சரிசி புழுங்கல் அரிசி - தலா 2 கப்
உளுந்தம் பருப்பு - முக்கால் கப்
வெந்தயம் -1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக நீரில் ஊறவைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மாவு 8 மணி நேரம் ஊறியதும், தோசைமாவு பதத்தில் கரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், தேங்காய் துருவலை வதக்கி, அரைத்த மாவில் சேர்க்கவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய் விட்டு மாவை மொண்டு ஊற்றவும். வெந்ததும் கம்பியால் திருப்பிப்போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
இனிப்பு பணியாரம்
தேவை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா - 1 கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - அரை கப்
வெந்தயம் - சிறிது
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் களைந்து, ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும். 8 மணி நேரம் மூடி வைக்கவும். வெல்லப் பொடியை சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி கம்பி பாகாக காய்ச்சி, மாவில் ஊற்றி கரைக்கவும். தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்க்கவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய் விட்டு மாவை மொண்டு ஊற்றவும். வெந்ததும் கம்பியால் திருப்பிப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு பணியாரம் தயார்.
ரவை பணியாரம்
தேவை:
ரவை -2 கப்
மோர் - 2 கப்
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவை கேட்க
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க
செய்முறை:
வாணலியில் ரவையை வறுத்து, உப்பு கலந்த மோரில் ஊற வைக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சித் துருவல் கலந்து, பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு கரண்டியில் கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து மாவில் சேர்க்கவும். மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய்விட்டு மாவை மொண்டு ஊற்றவும். வெந்ததும் கம்பியால் திருப்பிப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான ரவை பணியாரம் தயார்.