உங்கள் வீட்டில் என்றாவது ஒரு நாள் சாதம் மிந்து போனால் இனி அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதைப் பயன்படுத்தி எளிதாக கர்நாடகாவில் பிரபலமான அக்கி ரொட்டி செய்யலாம். இந்த அக்கி ரொட்டி தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பழைய சாதம் - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
இஞ்சி- ½ ஸ்பூன் துருவியது
தேங்காய் - ¼ கப் துருவியது
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கர்நாடகா அக்கிரொட்டி செய்ய முதலில் பழைய சாதத்தை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், அரிசி மாவு, சீரகம், தேங்காய், தேவையான அளவு உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வெந்நீர் ஊற்றி மென்மையாக பிசைய வேண்டும்.
அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வாழை இலையில் வைத்து கொஞ்சமாக எண்ணெய் தடவி ரொட்டி போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ரொட்டியை மிதமான தீயில் வைக்க வேண்டும். பிறகு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால், சுவையான அக்கிரொட்டி தயார். இது எளிதாக செய்யும் ஒரு காலை உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.
இனி உங்கள் வீட்டில் மீந்து போன பழைய சாதத்தை வீணடிக்காமல் இப்படி சுவையான ரொட்டி செய்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.