இந்த பொடியை மட்டும் நாம் தயார் பண்ணி வைத்துக்கொண்டால் இரண்டே நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ், மற்றும் வெளியூர் கிளம்புவதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். சாம்பார் போர் அடிக்கும் சமயம் இந்த புளியோதரை செய்து அசத்தலாம். உருளைக்கிழங்கு வறுவலுடன் சூப்பராக இருக்கும். இந்த புளியோதரை பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
புளி 100 கிராம்
கடலைப்பருப்பு 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 15
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க :
கடுகு,
கருவேப்பிலை சிறிது,
வேர்க்கடலை 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை கொட்டை, நார் ஆகியவற்றை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு மிளகாய் வற்றலை கால் ஸ்பூன் உப்பு சேர்த்து (உப்பு சேர்ப்பதால் கமராது, இருமல் வராது) சிறிது நல்லெண்ணெயும் விட்டு நன்கு வறுக்கவும். வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
கடைசியாக சுத்தம் செய்து வைத்துள்ள புளியை போட்டு சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்தெடுத்து எல்லா பொருட்களையும் சிறிது நேரம் ஆறவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைஸ் ரவை பதத்தில் பொடித்து விடவும். இதனை ஈரம் இல்லாத ஒரு பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்து ஒரு மாதம் வரை கூட உபயோகிக்கலாம். வாசனை போகாது, சுவையும் குன்றாது.
ஆபீஸ் போகும் அவசரத்தில் லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற புளியோதரை மிக்ஸ் தயார். இதனை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, இரண்டு ஸ்பூன் புளியோதரை பொடி போட்டு கலந்து விட புளி சாதம் தயாராகிவிடும்.