

பொதுவாக நம் வீடுகளில் சேப்பங்கிழங்கு என்றாலே, அதை வேகவைத்து, மிளகாய்த்தூள் போட்டு ரோஸ்ட் மட்டும்தான் செய்வோம். "சேப்பங்கிழங்கா? அது பிசுபிசுன்னு இருக்கும், எனக்கு வேண்டாம்" என்று சொல்பவர்கள்தான் அதிகம். ஆனால், லக்னோவின் 'அவாதி' சமையல் முறைப்படி இதைச் செய்தால், அது ஒரு காய்கறி என்று சொன்னால் கூட யாரும் நம்பமாட்டார்கள்.
பன்னீர் பட்டர் மசாலாவே சலித்துப்போனவர்களுக்கு, இந்த வித்தியாசமான, நவாப்கள் விரும்பி சாப்பிட்ட "அவாதி அர்பி கா குருமா" ஒரு புதிய அனுபவமாக இருக்கும். வாருங்கள், அந்த ராஜ ரகசியத்தைக் கற்றுக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சேப்பங்கிழங்கு - ½ கிலோ
வெங்காயம் - 2
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1½ டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
சீரகத்தூள் - ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க - பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை.
செய்முறை:
முதலில் சேப்பங்கிழங்கை நன்கு கழுவி, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். அதிகம் குழையக்கூடாது, 80% வெந்தால் போதும். ஆறியதும் தோலை உரித்துவிட்டு, ஒவ்வொரு கிழங்கையும் உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தவும். இது தட்டையாக மாறும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, இந்தத் தட்டையான கிழங்குகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் கிழங்கின் வழுவழு்ப்புத் தன்மை போய், மேலே க்ரிஸ்பியாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும்.
அடுத்ததாக, குருமாவிற்கான மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். அதே எண்ணெியில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறியதும், வறுத்த வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு, சிறிது தயிர் சேர்த்து நைஸான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
மீதமுள்ள தயிரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்து வைத்துக்கொள்வது நல்லது. இது தயிர் திரிந்துபோகாமல் இருக்க உதவும்.
இப்போது குருமாவைத் தாளிக்கலாம். ஒரு கனமான பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்க்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இப்போது நாம் தயிரில் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வதக்கவும். அடுத்து, நாம் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது மற்றும் முந்திரி விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
கிரேவி நன்கு கொதித்து வரும்போது, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இப்போது பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்குகளை மெதுவாகக் குழம்பில் சேர்க்கவும். கடைசியாக கரம் மசாலா மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அவாதி உணவுகளுக்கே உரிய தனித்துவமான மணத்திற்காக, விரும்பினால் ஓரிரு சொட்டு 'ரோஸ் வாட்டர்' சேர்க்கலாம். மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் தம் போடவும்.
அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கொத்தமல்லித் தழைகளைத் தூவினால், வீடு முழுவதும் கமகமக்கும் "அவாதி அர்பி கா குருமா" தயார்.