

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து உணவுகளுமே ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் படுபவை. முற்காலத்தில் நமது முன்னோர்கள் வீட்டிலேயே அனைத்து விதமான உணவுகளையும் தயார் செய்து கொடுப்பார்கள். இயற்கையான முறையில் விளையும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சத்தான சுவையான உணவுகளை அவ்வப்போது செய்து உறவினர்களையும் நண்பர்களையும் மகிழ்விப்பார்கள்.
அற்புதமான உணவுக் கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் அவர்களிடம் கேட்கும் கேள்வி “சாப்பிட்டீங்களா ?” என்பதாகவே இருக்கும். சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன் என்று சொன்னாலும் விடமாட்டார்கள். தங்கள் வீட்டில் இருப்பதை அவர் களுக்கு சாப்பிடக் கொடுத்த பின்னரே அவர் களுடைய மனதில் ஒருவித நிம்மதி ஏற்படும். வீட்டில் அப்போது கொடுக்க ஏதும் இல்லை என்றால் காபி அல்லது மோர் கொடுத்து உபசரிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவு பிரபலமாக இருக்கும். அத்தகைய வட்டார உணவுகளை அங்கே சென்று சாப்பிட்டால்தான் முழு சுவையினையும் நாம் அனுபவிக்க முடியும்.
கோயமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரபலமான ஒரு மாலை நேரத் தின்பண்டம் கச்சாயம். செய்வது எளிது. சுவையோ அபாரம். கோதுமை மாவிற்கு பதிலாக பச்சரிசி மாவைச் சேர்த்துச் செய்வதும் உண்டு.
செய்யத் தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – 1
கோதுமை மாவு – 250 கிராம்
ரவை – 50 கிராம்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் குழைத்துக்கொள்ளவும்.
கோதுமை மாவு, ரவை, ஏலக்காய்ப்பொடி, வெல்லத்தூள், உப்பு முதலானவற்றை இதில் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாத பதத்திற்குக் கலந்துகொள்ளவும். இந்த மாவை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து பொரித்து எடுக்கத் தேவையான அளவிற்கு எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் மாவை கையில் அள்ளி சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில்விடவும். சிறு தீயில் நன்றாகச் சிவந்ததும் அதை எடுத்து தட்டில் வைக்கவும்.
எளிமையான மாலை நேர தின்பண்டம் இது. சுவையான இந்த மாலை நேர உணவினை யார் வேண்டுமானாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். அரைமணி நேரத்தில் கொங்கு நாட்டு கச்சாயம் தயாராகிவிடும்.