காலை உணவாக இந்த கேரட் எலுமிச்சை சாதம் ஒரு முறை செஞ்சு பாருங்க.. சுவை வேற லெவல்!
எப்போதுமே காலை உணவாக இட்லி தோசையை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமாக இந்த கேரட் லெமன் சாதம் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. உண்மையிலேயே இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். காலையில் நாம் எப்போதுமே ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த கேரட் லெமன் சாதத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றல் நிறைவாக கிடைப்பதால், இதை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
பச்சை மிளகாய் - 4
காரட் - 1
எலுமிச்சை சாறு - ¼ கப்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
முந்திரி - 5
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து, சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விட வேண்டும். பின்னர் அரிசி வெந்ததும் குக்கரைத் திறந்து அரிசியை வேறு தட்டுக்கு மாத்தி ஆற விடுங்கள்.
பிறகு ஒரு வானலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதிலேயே வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். பிறகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்ததாக துருவிய கேரட்டை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பிறகு மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பின்னர் இந்த கலவையை தனியாக எடுத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்த்து நன்கு கலக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால், சூப்பர் சுவையில் கேரட் லெமன் சாதம் தயார்.