சமையலில் அடிக்கடி சொதப்புதா? இந்த 12 குறிப்புகள் இருந்தா நீங்கதான் கிங்!

பஜ்ஜி, பாயசம், சட்னி வரை சுவை, மணம், மொறு மொறுப்பை கூட்டும் எளிய சமையல் டிப்ஸ் தொகுப்பு.
Cooking Tips Tamil
Cooking Tips TamilAI Image
Updated on

தேங்காயைத்துருவிப் போட்டு பொரியல் செய்தால் இரவுக்குள் ஊசிவிடும் வாய்ப்புண்டு. எனவே கடுகு, பருப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கிவிட்டு பின்னர் காயைப் போட்டுக்கிளறி சமைத்துப் பாருங்கள். எவ்வளவு நேரமானாலும் ஊசவே ஊசாது.

வெல்லக்கொழுக்கட்டை செய்யும்போது துணி போட்டு வைத்தால் அதில் ஒட்டிக்கொள்ளும். வாழையிலைக் கிழிசலைப்போட்டால் சிறிதும் ஒட்டாது. கொழுக்கட்டை வீணாகாமல் எடுக்கவும் வரும்.

பாயசத்துக்குப் போட முந்திரிப் பருப்பு இல்லையென்றால் முற்றின தேங்காயைப் பல்லுபல்லாக நறுக்கி, நெய்யில் சிவக்க வறுத்துப்  பாயசத்தில் போட்டால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.

மோர்க்குழம்புக்கு தாளிக்கும்போது, கடுகுடன், மூன்று வெங்காய வடகத்தையும் உதிர்த்து இட்டுத் தாளித்தால் மோர்க்குழம்பின் சுவையே அலாதிதான்.

பஜ்ஜி செய்ய கடலைமாவு இல்லையா? கவலை வேண்டாம். கடலைப்பருப்பை ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து மொறு மொறுப்பான பஜ்ஜி செய்யலாம்.

அரிசியை விட புரோட்டின் சத்து அதிகமுள்ள அவலை தினசரி உப்புமா போல் தாளித்தோ, புளி அவல் செய்தோ, வெல்லம் சேர்த்து இனிப்பு அவலாகவோ, சுவையான அவல் பாயசமாகவோ செய்யலாம்.

இனிப்பு பலகாரம் செய்யும்போது வெல்லப்பாகு மீந்துவிட்டதா? அதில் தேங்காயை துருவிப்போட்டு, அரைமணி நேரம்  கழித்து வில்லை, வில்லைகளாக எடுக்கலாம். சுவையான கோக்கனட் க்ரன்ச் ரெடி.

இட்லிக்கு அரைத்தமாவு நிறைய மீந்துவிட்டதா? இட்லிமாவில் கொஞ்சம் அரிசிமாவு, மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்து, ராத்திரி டிபனுக்கு சுவையான புளி உப்புமா செய்யலாம்.

வெங்காய தோசை, வெங்காய அடை செய்யும்போது, முதலில் அரிந்த வெங்காயத்தை தோசைக்கல்லில் பரவலாகப் போட்டு, பிறகு மாவை ஊற்றினால் எல்லா இடத்திலும் வெங்காயம் சீராகப் பரவும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.

பக்கோடா, வதக்கல்கறி செய்யும்போது சிறிது ஆம்சூர்  பொடி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மோர்க்குழம்பு முதல் இஞ்சித் துவையல் வரை வீட்டுச் சமையலுக்கு பயனுள்ள டிப்ஸ்!
Cooking Tips Tamil

புளிக்காத மாவை எடுத்து உபயோகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், அந்த மாவில் பெரிய எலுமிச்சம் பழத்தில் ஒன்றைப் பிழிந்து நன்கு கலக்கி வைத்துவிட்டு, பத்து நிமிடங்கள் கழித்து தோசை வார்த்தால் தோசை சிறிது புளிப்பாகவும், வித்தியாசமான வாசனையுடனும் இருக்கும்.

இட்லி, தோசைக்கு சட்னி அரைக்கும்போது வறுத்த நிலக்  கடலை, புளி, கறிவேப்பிலை, பெருங்காயம் வைத்து அரைத்தால் சட்னி ருசி மிகுந்து இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com