
சமையலறையில் சமையலில் நமக்கு தெரியாமல் நடக்கும் சமையல் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கும்போது அதற்கு உதவும் சில டிப்ஸ்கள்...
கொண்டைக் கடலையை வேகவைப்பதற்கு முன்பு ஊறப்போட நேரமில்லாவிட்டால் அதில் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து வேக வையுங்கள். விரைவாக கடலை வெந்துவிடும். அரிசி, பருப்பு எதை ஊற வைத்தாலும் ஒரு இரும்புக் கரண்டியை அதில் போட்டு வைத்தால்,வெகு சீக்கிரத்தில் ஊறிவிடும்.
குழம்பு, கூட்டு வகைகளில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கடலைமாவு, மைதா மாவு போன்றவைகளை கலக்குவார்கள். அதற்கு பதிலாக முந்திரி பருப்பு அரைத்துச் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இது சாம்பாரில் இருக்கும் அதிகமான உப்பின் சுவை குறைந்துவிடும். தோசை மாவில் உப்பு அதிகமாகிவிட்டால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து, பாலில் ஊறவைத்து மாவில் சேர்த்து விடுங்கள். உப்பு சுவை குறைந்துவிடும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அவல் சேருங்கள். ருசி அதிகமாவதுடன் எளிதாக வடையும் சுட்டு எடுக்கலாம்.
வீட்டில் அரிசி மாவு இல்லையா?. மைதா மாவை அரிசி மாவு போலப் பலவிதமான பலகாரங்கள் செய்யலாம். ஆனால் மைதா மாவை முதலில் ஆவியில் வேக வைத்து அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்துக் கொண்ட பிறகு அரிசி மாவுபோல பயன்படுத்தலாம். ஆனால் மைதா மாவை தண்ணீர் விட்டு கிளறிவிடாதீர்கள் பசையாகிவிடும். ஆவியில் தண்ணீர் படாமல் வேக வைக்கவேண்டும்.
வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் சமயம் மோர் இல்லாமல் போய்விட்டால் கவலைப் படாதீர்கள். வெதுவெதுப்பான பாலில் சிறிது உப்பை கலந்து எலுமிச்சை பழத்தைப் பிழியுங்கள்.திடீர் மோர் கிடைத்தவிடும்.
செய்து முடித்த குழம்பு வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி குழம்பில் போடலாம், சப்பாத்திக்கு தயாராக்கி வைத்திருக்கும் கோதுமை மாவை உருட்டி குழம்பில் போடலாம்,சோற்றை சிறிதளவு துணியில் கட்டியும் குழம்பினுள் போடலாம். எதைப் போட்டாலும் சரி குழம்பை பரிமாறும் முன் எடுத்து விடுங்கள்.
வீட்டில் இருக்கும் வடகத்தை அவசரத்தில் எண்ணெயில் போட்டால் பொரியவே செய்யாது. வதங்கி, சுருங்கி அவஸ்தை கொடுக்கும்.இதனை தவிர்க்க வடகம் பொரிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றுவதற்கு முன், வடகத்தை போட்டு கொஞ்சம் சூடேறுமாறு வறுத்துவிட்டு, பின் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் போட்டு பொரிதால், நன்றாக பொரிந்து விடும்.
பாயாசம் செய்யும் போது அது கெட்டியாகிவிட்டால், இளம் சூட்டில் பசும் பாலை அதில் சேர்த்தால் போதும் சரியாகும். ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம் கொஞ்சம் முருங்கை இலை போட்டு இறக்கவும் தனி சுவையாக இருக்கும்.
சாம்பாரில் புளிப்பு சுவை கூடிவிட்டால் ஒரு துண்டு வெல்லக்கட்டி சேர்த்தால் போதும் சரியாகிவிடும். புளி பழையதாகி இருந்தால், அதைச் சேர்க்கும் குழம்பு, சாம்பார் போன்றவையும் கருப்பாக பழைய வாசனையுடன் இருக்கும். இதைத் தவிர்க்க, சாம்பார் தயாரித்து முடித்து, அடுப்பை அணைத்ததும், சாம்பாரில் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்துவிட்டால், புளியினால் ஏற்பட்ட நிறம் மாறி சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.
சமைக்கும்போது உருளைக்கிழங்கு அதிகமாக வெந்து மாவு போல ஆகி விட்டால் அதை தடுக்க பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.
சப்பாத்திக் மாவு பிசையும்போது "சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டடால் கவலையே வேண்டாம். அந்த மாவை அப்படியே ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக மாற்றலாம்.
கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.