

வழக்கமாக நாம் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடி, சட்னி, சாம்பார் முதலானவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் செட்டிநாடு பகுதிகளில் திரக்கல் என்றொரு சமையலை தொட்டுக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள். கத்தரிக்காய் மற்றும் உருளைக் கிழங்கை பிரதானமாக வைத்து இந்த துணை உணவு சமைக்கப்படுகிறது. இனி இதை எப்படி சமைப்பது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ
உருளைக்கிழங்கு – கால் கிலோ
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தக்காளி – ஒன்று
பூண்டு – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்துமல்லி
உப்பு
எண்ணெய் – சிறிதளவு
விழுதுக்குத் தேவையானவை:
துருவிய தேங்காய் – அரை கப்
சோம்பு – சிறிதளவு
தனியா – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 சிறு துண்டு
பச்சைமிளகாய் – 3
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு, தனியா, மிளகு, பட்டை, பச்சைமிளகாய், பொட்டுக்கடலை முதலானவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அனைத்தும் வதங்கிய பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி பின்னர் ஆறவைக்க வேண்டும். நன்றாக ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை முதலானவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சிறிதாக வெட்டி அதில் சேர்த்து சிறிது மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.
மேலே உள்ளவை நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து சிறிது உப்பு மற்றும் சிறிது தண்ணீரை சேர்த்து நன்றாகக் கலந்து கடாயை மூடி நன்றாக வேகவைக்கவும்.
குக்கரில் வைத்தால் இரண்டு விசில் சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும். குக்கரைத் திறந்து அதில் மல்லித்தழையைத் தூவி இறக்கவேண்டும். கடாய் என்றால் எல்லாம் நன்றாக வேகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
சுவையான செட்டிநாடு திரக்கல் தயார். இதை இட்லி, தோசை அல்லது சப்பாத்தி முதலான டிபன்களுக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.