நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாரம்பரியமான உப்பு உருண்டையை அரிசி கொண்டு செய்திருப்போம். கேழ்வரகு மாவில் மிக எளிதாக உப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு - 100 கிராம், பெருங்காயம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை தாளித்து, இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்துக்கொள்ளவும்.
கேழ்வரகு மாவு மீது உப்புத் தண்ணீரை சிறிது சிறிதாக, தெளித்து கலந்து உதிரிபோல் செய்துகொள்ளவும். மிகவும் கவனமாக குழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடம் இதுதான்!
உதிரியாக பிசைந்த மாவை ஆவியில் வேகவைத்து, பின்னர் வாணலியில் வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளறவும்.
கை பொறுக்கும் அளவிற்கு சூடு தணிந்தவுடன், சின்னஞ்சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லிப் பானையில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கேட்டு கேட்டு சாப்பிடும் சத்தான, வித்தியாசமான சுவையில் கேழ்வரகு உப்பு உருண்டை தயார்.