

லேசி சோம்பேறி டின்னர்:
கேரட் 1
வெங்காயம் 1
தக்காளி 2
பூண்டு 6 பற்கள்
இஞ்சி சிறு துண்டு
முந்திரிப்பருப்பு 6
கறிவேப்பிலை சிறிது
தனியா தூள் 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
இட்லி மாவு 2 கப்
அலங்கரிக்க - பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது
செய்முறை:
வெங்காயம் தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி துண்டுகளாக்கவும். இவை இரண்டுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். ரொம்பவும் விழுதாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
முந்திரிப்பருப்பை சிறிது வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். மிக்ஸியில் தக்காளி, பூண்டு பற்கள், தோல் சீவிய இஞ்சித் துண்டு, ஊற வைத்த முந்திரிப் பருப்பு, தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
இதனை வதக்கிய காயுடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க விடவும். இப்பொழுது இட்லி மாவை கரண்டியால் எடுத்து கொதிக்கும் மசாலாவில் விட்டு தட்டை போட்டு மூடி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
வாணலி கொள்ளும் வரை 3 அல்லது 4 இட்லிகளாக விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வேக விடவும். வெந்ததும் மேலாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி சுடச்சுட பரிமாற மிகவும் ருசியான, நாவை சுண்டி இழுக்கும் டிபன் தயார். வேலைக்கு செல்பவர்களுக்கும், பேச்சிலர்களுக்கும் ரொம்பவே கைகொடுக்கும் இந்த ரெசிபி.
மேலாக சிறிது நெய் விட்டு பரிமாற குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இரவு உணவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலை அவசரத்திற்கும் ஏற்ற உணவு இது. செய்துதான் பாருங்களேன்!