
சேனைக்கிழங்கு அல்லது கருணைக்கிழங்கு என்று சொல்லும் கிழங்கை பார்த்து பலர் தள்ளுபடி செய்வார்கள். காரணம் அதன் அரிப்பு தன்மை. ஆனால் அதை ஒருமுறை ருசித்து பார்த்தால் பின் விடவே மாட்டார்கள். இதோ சூடான சோற்றுக்கு சுவையான கருணைக்கிழங்கு சைட் டிஷ்கள்.
கருணைக்கிழங்கு கார குழம்பு
தேவை:
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
பாசிப்பயிறு- 1/4 கப்
வெங்காயம்- 2
தக்காளி- 2
புளி கரைசல் - தேவைக்கு நல்லெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவைக்கு
பெருங்காயம்- 2 சிட்டிகை
கருவேப்பிலை- சிறிது
வறுத்து அரைக்க
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன்
கசகசா - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
செய்முறை:
வறுத்து அரைக்கத் தந்துள்ள பொருள்களை பதமாக சிறு தீயில் வைத்து மணம் வர வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள். கருணைக்கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி குக்கரில் போட்டு அதனுடன் பாசிப்பயறு, தக்காளி சேர்த்து வேகவைத்து எடுத்து மசிக்கவும்.
அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த தேங்காய் மற்றும் தனியா மசாலை சேர்த்து தேவையான புளிக்கரைசல் ஊற்றி கொதித்ததும் மசித்த கிழங்குக் கலவை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது பெருங்காயம் தூவிக் கலந்து இறக்கவும். சோற்றுக்கு போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
கருணைக்கிழங்கு வறுவல்
தேவை:
கருணைக்கிழங்கு – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவைக்கு
ஏதேனும் 65 மசாலா – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
புளி கரைசல் – தேவைக்கு
கடலை மாவு - 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் சீவி எடுத்து கழுவி சுத்தம் செய்து கைகள் அரிக்கும் என்பதால் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு சதுரத் துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை கொதிக்க வைத்து அதில் துண்டுகளைப் போட்டு சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு முக்கால் பாகம் வேக வைத்து வடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது புளிக்கரைசலில் தந்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கடலைமாவு, உப்பு போன்றவற்றை கொஞ்சம் நீர் தெளித்து திக்காக கலந்து வடித்து வைத்த கிழக்குத் துண்டுகளின் இருபுறமும் தடவிக் கொள்ளுங்கள்.
மசாலா தடவிய கருணைக்கிழங்கை பத்து நிமிடம் அப்படியே ஊறவிட்டு ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் நாலு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய்யை சுற்றிலும் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து கலந்து வைத்த கிழங்கு துண்டுகளைப்போட்டு இருபுறமும் திருப்பி விட்டு சிவக்க எடுக்கவும். நறுக்கிய கருவேப்பிலையை போட்டு பொரியவிட்டு எடுத்த வறுவலில் சேர்த்துப் பரிமாறலாம். வித்யாசமான புளி சுவையுடன் காரசார வறுவல் ரெடி.