

நீராத்தண்ணி சாதம்…
பெயரே வித்தியாசமாக இருக்கிறதா..? நீராகரத்தைத்தான் சின்ன வயசுல எதிர்வீட்டு அழகம்மாள் ஆச்சி நீராத்தண்ணின்னு சொல்வாள். மண்பானையில், மதியம் சோறு வடித்த கஞ்சியில், ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு வைத்திருப்பாள். இரவு பானையில் மீந்த சாதத்தில் அந்த தண்ணீரை ஊற்றி வைத்துவிடுவாள்.
மறுநாள் காலை அதை இறுத்து (கையால் வடிகட்டி) எடுப்பாள். புளிப்பு மணம் தூக்கலாயிருக்கும். இதுதான் "நீராத்தண்ணி". இப்ப, குக்கரில் சோறு பொங்குவதால், கஞ்சி வடிக்கும் வேலை இல்லை. அதனால, பாத்திரத்தில், சாதத்தைப் போட்டு, உப்புப் போட்டு தண்ணீரை ஊற்றி, மறுநாள் இறுத்து நீராத்தண்ணி ரெடி பண்ணலாம். இனி, நீராத்தண்ணி சாதம்எப்படிப் பொங்கலாம்ன்னு சொல்றேன் வாங்க…
தேவை:
நீராத்தண்ணி 4கப்
புழுங்கலரிசி 1கப்
மிளகாய் வற்றல் 2
கடுகு, உளுந்தம்பருப்பு 2டீஸ்பூன்
காயம் 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் 1டேபிள் ஸ்பூன்
உப்பு திட்டமாக
கறிவேப்பிலை 7எண்ணம்
செய்முறை:
புழுங்கலரிசியை ஒன்றிரண்டாக உடைக்கவும். குக்கரில் நீராத்தண்ணியை ஊற்றவும். வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, கடுகு, உளுந்தப் பருப்பு, மற்றும் மிளகாய் வற்றல்களை இரண்டாக கிள்ளிப்போட்டு தாளித்து, அதில் சேர்த்து குக்கரை அடுப்பில், மிதமான தீயில் வைக்கவும்.கொதி வந்தவுடன், உடைத்த குருணை அரிசியைப் போட்டு, உப்பு, காயம், கறிவேப்பிலையை போட்டு, கலக்கி மூடிவிடவும். மூன்று விசில் சத்தம் வந்ததும், தீயை அணைத்து, சற்று கழித்து திறந்தால், தூக்கலான வாசனையுடன் நீராத்தண்ணி சாதம் சாப்பிடத் தூண்டும். பொரித்த கூழ் வற்றலும், தனியாத் துவையலும் செம சைட்டிஷ்.
தனியாத் துவையல்
தேவை:
மல்லி விதை 1 டீஸ்பூன் (அதிகம் சேர்த்தால் கசப்பாகி விடும்)
மிளகாய் வற்றல் 4
தேங்காய்ப்பூ 2டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு 1டீஸ்பூன்
புளி சுண்டைக்காய் அளவு
நல்லெண்ணெய் 2டீஸ்பூன்
உப்பு திட்டமாக
கறிவேப்பிலை 6எண்ணம்.
செய்முறை:
மிதமான தீயில் வாணலியை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்தவுடன் கறிவேப்பிலையை போட்டு, பொரித்து எடுக்கவும். பின், மல்லி விதை, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பை தனித்தனியே வறுக்கவும். எல்லாவற்றையும், மிக்ஸிக்கப்பில் போட்டு, உப்பு, புளி, தேங்காய்ப்பூ சேர்த்து நைசாக அரைக்கவும். சூப்பராயிருக்கும். மீதமிருந்தால், தோசை, இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.