

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு ஏற்ற மூன்று வகை உருண்டைகள்!
பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டை
தேவை:
பொட்டுக்கடலை - முக்கால் கப்
டேட்ஸ்(நறுக்கியது) - கால் கப் நெய் - தேவைக்கு
செய்முறை:
ஒரு கடாயில் பொட்டுக்கடலையை போட்டு வறுத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய டேட்ஸ் போட்டு, இரண்டு சுற்று அரைத்தால் டேட்ஸ் பொடியாக ஆகிவிடும்.வறுத்த பொட்டுக்கடலை ஆறியதும் அதையும் அரைத்த டேட்ஸுடன் சேர்த்து பொடிக்கவும்.
பொட்டுக்கடலை டேட்ஸ் பொடியை ஒரு தட்டிற்கு மாற்றி அதனுடன், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டைகள் தயார். குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இனிப்பு இது.
சிவப்பு அவல் உருண்டை
தேவை:
சிவப்பு கைக்குத்தல் அவல் – ஒரு கப்,
பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டீஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வதக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
பாகு வெல்லம் – முக்கால் கப்,
வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
நெய், எண்ணெய் – தலா 50 கிராம்.
செய்முறை:
நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த சிவப்பு அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகை அவல் கலவையில் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான சத்தான சிவப்பு அவல் உருண்டை தயார்.
மரவள்ளி கிழங்கு உருண்டை
தேவை:
மரவள்ளி கிழங்கு - அரை கிலோ
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 2
தேங்காய்த் துருவல் - கால் கப்
செய்முறை:
மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். துருவிய கிழங்கை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
வேகவைத்த கிழங்குடன் தேங்காய் துருவல், துருவிய வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். இப்படியே கிழங்கு புட்டாகவும் பரிமாறலாம்.
இந்த கலவையை உருண்டையாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து கிழங்கு உருண்டையாகவும் பரிமாறலாம். சுவையான, சத்தான மரவள்ளிக் கிழங்கு உருண்டை ரெடி.