
இன்றைய பரபரப்பான சூழலில் பண்டைய காலம்போல பருப்பு, ரசம், பொரியல் என பலவகை சத்தான உணவுகளை வீட்டில் பொறுமையுடன் சமைத்துப் பரிமாற ஆட்களும் இல்லை. உட்கார்ந்து சாப்பிட நேரமும் இல்லை! இதற்கு ஒரு மாற்று வழியாய் தோன்றியதுதான் துரித உணவு (Fast Food) கலாச்சாரம்.
இதன் வரலாறு மிகப் பழமையானது. நம் பாரம்பரிய சமோசா மற்றும் சாட் வகை உணவுகளை விற்று வந்த சிறிய அளவு தெருக்கடைகளிலிருந்து உலகளாவிய மெக்டொனால்ட் மற்றும் கேஎஃப்சி போன்ற பெரியளவு உணவகங்கள் வரை இந்த உணவுச் சங்கிலி நீண்டு விட்டது.
ஆரம்பத்தில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற அயல் நாடுகளில் தோன்றிய ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், 1930 களுக்குப் பின் டெல்லியில் இந்தியன் காபி ஹவுஸ் மற்றும் நிருலாஸ் போன்ற உணவகங்கள் மூலம் இந்தியாவில் கால் பதித்தது. அவர்கள் இந்திய உணவுகளுடன் மேற்கத்திய ஸ்டைல் ஸ்னாக்ஸ்களையும் உணவுகளையும் வழங்கத் தொடங்கினர்.
1990 க்குப் பின் அமுலுக்கு வந்த பொருளாதார தாராளமயமாக்குதல் பாலிசிக்குப் பின்னரே மெக்டொனால்ட் மற்றும் கே எஃப் சி போன்ற பிரசித்தி பெற்ற உணவகங்கள், இந்தியர்கள் விரும்பும் சுவையில் தங்கள் மெனுவில் ஆலூ டிக்கி, பர்கர் போன்ற வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய ஆரம்பித்தனர். படிப்படியாக, டொமினோஸ் மற்றும் பீட்ஸா ஹட் போன்ற நிறுவனங்களும் போட்டியில் பங்கேற்கத் தொடங்கின.
உள்நாட்டு தெருக்கடை விற்பனையாளர்களும் தங்கள் தொழில் நிலைத்திருக்க, சில புதுமைகளைப் புகுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். கடையின் தோற்றம் புதுப்பொலிவு பெற்றது. உணவுகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் தயாரிக்கப்பட்டன. பாரம்பரிய வகை உணவுகளின் தயாரிப்பில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மூலப் பொருட்கள் சிலவற்றை சேர்த்து சுவையை கூட்டினர். விளைவு, வியாபாரம் விரைவில் பெருகியது. அதிகளவு மக்கள் தொகை காரணமாக பணப் புழக்கமும் அதிகரித்தது.
நன்மைகள்: துரித உணவுகள் சுவையாகவும் விரைவாகவும் கிடைக்கிறது. விலையும் பட்ஜெட்டுக்குள் அடங்கியே உள்ளது. பொட்டட்டோ ஃபிங்கர் ஃபிரை போன்ற சைவ உணவுகள் அதிக ருசியில் ஆடம்பரமான அட்டைக் கொள்கலன் (Container) களில் வழங்கப்படுகின்றன.
இந்த உணவகங்கள், டிஜிட்டல் மெனு பலகைகள், ஆன்லைன் ஆர்டர் செயலிகள் மூலம் ஆர்டர் பண்ணவும் உணவுகளைப் பெற்றுக் கொள்ளவுமான வசதி உள்ளிட்ட பல உணவக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுவதால் பயனர்கள் திருப்தியடைகின்றனர்.
தீமைகள்: துரித உணவுகளில் கலோரிகள் அதிகம். சுவைக்காக பட்டர், சீஸ், பன்னீர் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகள் மற்றும் உப்பு சர்க்கரை போன்றவையும் அதிகமாக சேர்க்கப்படுவதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
பால், முட்டை, இறைச்சி போன்ற அசைவம் சேர்த்த உணவு வகைகள் அதிகமாக விற்பனையாவது, நோய்களின் விகிதங்கள் வேகமாக அதிகரிக்க காரணமாகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக நிர்வாகத்தினர், குறைந்த கொழுப்புள்ள சாலட்கள் மற்றும் கிரில்டு வகை உணவுகளையும் அவர்கள் விற்பனை செய்வதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில், புதுப்புது கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப மேம்பாடு போன்ற காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் வழங்கும் தொழில் நல்ல முன்னேற்றமடையும் என்றே கூறலாம்.