

மாலை நேரத் தேநீருடன் சூடாக, மொறுமொறுப்பாக ஏதேனும் சாப்பிடத் தோன்றும் போது நம் நினைவிற்கு வரும் முதல் பலகாரம் மைசூர் பஜ்ஜி. வெளிப்பக்கம் நல்ல மொறு மொறுப்பும், உள்பக்கம் காலியா வராம பஞ்சு போன்ற மென்மையும் கொண்ட இந்த போண்டாவை, மிக எளிய முறையில் நம் வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று இங்கு காண்போம். இதை செய்ய...
தேவையான பொருட்கள்:
மைதா மாவு 1 கப்
அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன் (மொறு மொறுப்பிற்கு)
கெட்டித் தயிர் ½ கப் (லேசான புளிப்பு)
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன் (மிகவும் பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு (நறுக்கியது)
சமையல் சோடா _ ½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ¼ டீஸ்பூன்
உப்பு & தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாமாவு, அரிசி மாவு, கெட்டித் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, கட்டிகள் ஏதுமின்றி கெட்டியான போண்டா மாவு பதத்திற்கு (இட்லி மாவை விட சற்று கெட்டியாக) நன்கு அடித்து பிசையவும்.
பிசைந்த மாவைப் மூடி வைத்து குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் ஊறவிடவும். மாவு நன்றாக ஊறினால் தான் பஜ்ஜி உள்ளே பஞ்சு போல உப்பி வரும். ஊறிய மாவில் சீரகம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். இறுதியாகச் சமையல் சோடாவைச் சேர்த்து, மாவை ஒரே திசையில் 2-3 நிமிடங்கள் நன்றாகக் கைவிட்டு அடித்து கலக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காயவைக்கவும். கைகளில் சிறிதளவு தண்ணீரைத் தொட்டுக்கொண்டு, சிறிய உருண்டைகளாக மாவை எடுத்து எண்ணெயில் போடவும். தீயை மிதமாக வைத்து, போண்டாக்கள் எல்லாப் பக்கமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை திருப்பிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
சுடச்சுட காரசாரமான தேங்காய் சட்னி, peanut சட்னி அல்லது இஞ்சி சட்னியுடன் பரிமாறினால் மைசூர் பஜ்ஜி மிகவும் பிரமாதமாக இருக்கும்!
சில முக்கியமான ரகசிய டிப்ஸ்கள் இதோ:
1.மாவைக் கரைக்கும்போது விஸ்க் (Whisk) அல்லது கைகளைப் பயன்படுத்தி ஒரு திசையிலேயே 3 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக அடித்து கலக்கவேண்டும். இப்படிச் செய்வதால் மாவுக்குள் காற்றுப் பைகளில் (Air pockets) உருவாகி, பஜ்ஜி பஞ்சுபோல மென்மையாக வரும்.
2.மாவு மிகவும் தண்ணீராவோ அல்லது தடிமனாவோ இருக்கக் கூடாது. இட்லி மாவைவிட சற்று கெட்டியாக இருக்கவேண்டும். மாவை எடுத்தால் மெதுவாகக் கீழே விழும் பதமே சரியானது.
3. மாவைப் பிசைந்ததும் உடனே பொரிக்கக் கூடாது. குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தயிர் சேர்த்து மாவு புளித்து ஊறும் போதுதான் அந்தப் புகழ்பெற்ற “மைசூர் பஜ்ஜி” பதம் கிடைக்கும்.
4. எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். எண்ணெய் அதிக சூடாக இருந்தால் வெளியே சீக்கிரம் சிவந்து, உள்ளே மாவு வேகாது. சூடு குறைவாக இருந்தால் போண்டா அதிக எண்ணெயைக் குடிக்கும்.
5.மாவை எண்ணெயில் போடுவதற்கு முன், உங்கள் கையைத் தண்ணீரில் லேசாக நனைத்துக் கொண்டு மாவை எடுத்தால், மாவு கையில் ஒட்டாமல் அழகாக உருண்டையாக விழும்.
6. பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகளைச் சேர்க்க மறக்காதீர்கள். பஜ்ஜியைக் கடிக்கும்போது இந்தத் தேங்காய் துண்டுகள் தனி சுவையைக்கொடுக்கும்.
7. கப் மைதாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு அல்லது பொடி ரவை சேர்த்தால் வெளிப்புறம் மிக நீண்ட நேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.
8. மாவை எண்ணெயில் போடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் சமையல் சோடாவையும், 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெயையும் சேர்த்து கலக்கவேண்டும். இது போண்டாவை நல்லா உப்ப வைக்கும்!