

இட்லி, தோசைக்கு எத்தனை வகையான சட்னிகள் இருந்தாலும், தக்காளி சட்னிக்கு தனி ரசிகர்கள் உண்டு. வீட்டில் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஹோட்டலில் கிடைக்கும் அந்த மணமும் சுவையும் வரவில்லையா? கவலை வேண்டாம். தக்காளியை சரியான பதத்தில் வதக்கும் ஒரு சின்ன ரகசியத்தைப் பின்பற்றினாலே, வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி செய்யலாம்!
தேவையான பொருட்கள்:
- நன்கு பழுத்த தக்காளி – 4 no
- பெரிய வெங்காயம் – 1 no
- காய்ந்த மிளகாய் – 4 no
- பச்சை மிளகாய் – 1 no
- பூண்டு – 4 பல்
- பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
- எண்ணெய் – ½ கப்
- சீரகம் -ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு – ½ ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து ¼ கப் எண்ணெய் ஊற்றவும். அதில் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளியைச் சேர்த்து மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு போடவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடவும்.
பின்னர் பொட்டுக்கடலையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் மென்மையாக அரைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதை அரைத்த சட்னியில் கொட்டிக் கலக்கவும்.
சூடான இட்லி, தோசை, ஊத்தப்பம், பணியாரம் என எல்லாவற்றுடனும் பரிமாறலாம்.
ஹோட்டல் சுவைக்கு முக்கியமான ரகசியம். வதக்கும் பக்குவத்தில் மறைந்து இருக்கும் ருசி!
தக்காளியைச் சேர்த்து தக்காளி நன்றாகக் குழைந்து, அதன் பச்சை வாசனை முழுவதும் நீங்கி, கலவையில் இருந்து எண்ணெய் லேசாகப் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
இதுதான் ஹோட்டல் சுவைக்கு முக்கியமான ரகசியம். தக்காளியை நன்றாக வதக்குவதால் அதன் புளிப்புச் சுவை சீராகி, சட்னிக்கு நல்ல நிறமும் மணமும் கிடைக்கும்.
ஹோட்டல் ருசிக்கான 5 சின்ன டிப்ஸ்:
1. நன்கு பழுத்த தக்காளியைத் தேர்வு செய்யுங்கள்
நன்கு பழுத்த தக்காளி பயன்படுத்தினால் சட்னிக்கு நல்ல நிறமும் இயற்கையான சுவையும் கிடைக்கும்.
2. வெங்காயத்தை வதக்கும் பக்குவம்
வெங்காயத்தின் பச்சை வாசனை போகும் வரை நிறுத்தாமல் வதக்குங்கள் அப்படி வதக்கினால் சட்னியின் சுவை நன்றாக இருக்கும்.
3. தக்காளியை நன்றாகக் குழைய விடுங்கள்
இதுதான் முக்கியமான டிப். தக்காளி வெறும் மென்மையாகும் வரை மட்டும் வதக்காமல், நன்கு குழைந்து எண்ணெய் லேசாகப் பிரியும் வரை வதக்குங்கள்.
4. பொட்டுக்கடலையை சேர்க்கும் அளவு
பொட்டுக்கடலையை சேர்க்கும் அளவு அதிகம் சேர்க்க வேண்டாம். ஒரு ஸ்பூன் போதுமானது. அதிகமாகச் சேர்த்தால் தக்காளியின் சுவை குறைந்து, சட்னி குழைவாக இல்லாமல் கெட்டியாகிவிடும்.
5. தாளிப்பு முக்கியம்.
கடைசியில் செய்யும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிப்பு சட்னிக்கு நல்ல மணத்தைக் கொடுக்கும்.
சட்னி அதிகம் புளிப்பாக இருந்தால், சிறிதளவு வேர்க்கடலையை சேர்த்து அரைக்கலாம். தேவைப் பட்டால் ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம். இது புளிப்பு மற்றும் காரத்தின் சுவையை சமநிலைப்படுத்த உதவும்.
வீட்டில் செய்யும் தக்காளி சட்னிக்கும் ஹோட்டல் சுவை கிடைக்க, விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் தேவையில்லை. தக்காளியைப் பொறுமையாக நன்றாக வதக்குவதுதான் முக்கியம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனித்துப் பாருங்கள்… அடுத்த முறை இட்லி, தோசையுடன் சட்னி பரிமாறும்போது, “இது வீட்டில் செய்ததா?” என்று ஆச்சரியமாக கேட்கும் அளவுக்கு சுவை மாறலாம்!
இந்த எளிய வதக்கும் முறையைப் பின்பற்றுவதன் மூலம், இனி உங்கள் வீட்டில் செய்யும் தக்காளி சட்னியும் அச்சு அசலாகப் முன்னணி உணவகங்களின் சுவையிலேயே அமையும். உணவு வீணாகாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடுதல் இட்லி, தோசைகளை விரும்பி உண்ணும் உணவனுபவத்தைப் பெறுவீர்கள்.