செட் தோசைக்கு ஹோட்டல் ஸ்டைல் வடை கறி வீட்லயே செய்வது இவ்வளவு ஈசியா?

சாதாரண இட்லி, தோசையின் சுவையை பல மடங்கு கூட்டும் அசல் சென்னை ஸ்பெஷல் வடை கறி வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வடை கறி vada curry recipe
வடை கறி vada curry recipe
Updated on

தென்னிந்திய உணவுகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மிகவும் பிரபலமான ஒரு காலை நேர உணவு என்றால் அது சுடச்சுட இட்லியும், செட் தோசையும் தான். ஆனால், இந்த உணவுகளின் சுவையை பல மடங்கு உயர்த்துவது அவற்றுடன் பரிமாறப்படும் ஒரு பிரத்யேக சைட் டிஷ் ஆகும். சட்னி, சாம்பார் என வழக்கமான தொடுகறிகளைத் தாண்டி, அட்டகாசமான ரெசிபிதான் வடை கறி. 

கல்யாண வீடுகளிலும், பிரபலமான உணவகங்களிலும் மட்டுமே கிடைக்கும் இந்த சுவையான உணவை, நமது வீட்டின் சமையலறையிலேயே மிக எளிதாகச் செய்துவிட முடியும். கடலைப்பருப்பை அரைத்து, வேகவைத்து, பின்னர் காரசாரமான மசாலாவில் ஊறவைத்துச் செய்யப்படும் இந்த அற்புதமான உணவை எப்படி அசல் சுவையில் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: 

வடை செய்வதற்கு:

  • கடலைப்பருப்பு - 1 கப்

  • காய்ந்த மிளகாய் - 3

  • சோம்பு - 1 டீஸ்பூன்

  • பூண்டு - 4 பற்கள்

  • உப்பு - தேவையான அளவு

கிரேவி செய்வதற்கு:

  • பெரிய வெங்காயம் - 2 

  • தக்காளி - 2

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

  • மல்லித் தூள் - 1.5 டீஸ்பூன்

  • கரம் மசாலா, மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன்

  • பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு - தலா 1

  • புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி

  • சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • தேங்காய் துருவல் - 1/2 கப்

  • முந்திரி - 5

  • சோம்பு - 1/2 டீஸ்பூன்

வடை கறி vada curry recipe
வடை கறி vada curry recipeCooking from Heart

செய்முறை! 

முதலில் கடலைப்பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும். பருப்பு ஊறியதும், தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை சிறுசிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கலாம். 

அல்லது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள், இதை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்தும் எடுக்கலாம். வேகவைத்த அல்லது பொரித்த வடைகளை நன்கு ஆறவிட்டு, கைகளால் சிறுசிறு துண்டுகளாக உதிர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு தாளிக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். 

வெங்காயம் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள். அடுத்ததாகத் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தக்காளி குழைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்ததும், தேங்காய், முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி, மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். தேங்காய் விழுது பச்சை வாசனை சென்ற பிறகு, நாம் உதிர்த்து வைத்துள்ள வடைகளை இதில் சேர்த்து மெதுவாகக் கிளறி விட வேண்டும். 

வடைகள் குழம்பிலுள்ள மசாலாவை உறிஞ்சி சற்று தடிமனாக மாறும் வரை ஒரு 5 நிமிடங்கள் குறைந்த தீயில் 'தம்' போட்டது போல மூடி வைத்திருக்க வேண்டும். இறுதியாக சிறிது கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். வீடு முழுவதும் மணக்கும் அசல் சென்னை ஸ்டைல் வடை கறி தயார். 

இதைச் சுடச்சுடச் செட் தோசை அல்லது பூரியுடன் தொட்டுச் சாப்பிட்டால், எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாத அளவுக்கு உணவு உள்ளே இறங்கும். இந்த அற்புதமான வடை கறி ரெசிபியை இன்றே உங்கள் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com