உருளைக்கிழங்கு பிடிக்காத மனிதர்களை இந்த உலகத்தில் கண்டுபிடிப்பது மிகக் கடினம். வட இந்தியாவில் வீட்டில் அவசரமாக சப்பாத்தி, லெமன் சாதம் அல்லது தயிர் சாதம் செய்யும்போது, அதற்குத் தொட்டுக்கொள்ள சட்டென்று 10 நிமிடத்தில் ஒரு அட்டகாசமான சைட் டிஷ் செய்ய வேண்டும் எனில், அனைவரின் முதல் சாய்ஸ் ஆலு ஜீரா தான். 'ஆலு' என்றால் உருளைக்கிழங்கு, 'ஜீரா' என்றால் சீரகம். வெறும் இந்த இரண்டு பொருட்களை வைத்தே ஒட்டுமொத்த சமையலறையையும் கமகமக்க வைக்க முடியும்.
பல நேரங்களில் நாம் வீட்டில் இதைச் செய்யும்போது உருளைக்கிழங்கு குழைந்து மசியல் போல மாறிவிடும். ஆனால், நார்த் இந்தியன் தாபாக்களில் கிடைப்பது போல, உருளைக்கிழங்கு உடையாமல் மொறுமொறுப்பாகவும், சீரகத்தின் மணம் உள்ளே ஊறியிருக்கும் படியும் ஆலு ஜீரா எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 4
சீரகம் - 1.5 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை!
இந்த ரெசிபியின் முதல் ரகசியமே உருளைக்கிழங்கை வேகவைப்பதில் தான் உள்ளது. குக்கரில் 5 விசில் விட்டு மாவு போலக் குழைய விடக்கூடாது. மிதமான தீயில் சரியாக 2 விசில் விட்டு, முக்கால் பதத்திற்கு மட்டுமே வேகவைக்க வேண்டும். வெந்த உருளைக்கிழங்கை நன்றாக ஆறவைத்து, தோலுரித்துத் துண்டுகளாக நறுக்கிய பின், அவற்றை ஒரு 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுங்கள். இப்படிச் செய்வதால் கடாயில் போட்டுக் கிளறும்போது உருளைக்கிழங்கு கொஞ்சம் கூட உடையாமல், கடாயில் ஒட்டாமல் பெர்ஃபெக்ட்டாக வரும்.
இப்போது ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றுங்கள். நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது இந்த டிஷ்ஷிற்கு ஒரு ரிச்சான மணத்தைக் கொடுக்கும். எண்ணெய் காய்ந்ததும், ஒன்றரை ஸ்பூன் சீரகத்தைச் சேர்க்கவும்.
சீரகம் கருகிவிடாமல், எண்ணெயில் நன்றாகப் பொரிந்து அதன் மணம் வெளியே வர வேண்டும். சீரகம் பொரிந்ததும் துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து ஒரு 10 விநாடிகள் வதக்குங்கள். பின்னர் அடுப்பை முற்றிலும் 'சிம்'மில் வைத்துவிட்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் லேசாகக் கிளறி விடுங்கள்.
மசாலா எண்ணெயில் லேசாக வதங்கியதும்,, நாம் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை இதில் கொட்டி, தேவையான அளவு உப்பு தூவி மிக மெதுவாகக் கிளற வேண்டும். மசாலாக்கள் உருளைக்கிழங்கின் எல்லாப் பக்கங்களிலும் ஒட்டியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 நிமிடங்கள் அப்படியே விடவும்.
உருளைக்கிழங்கின் வெளிப்பகுதி லேசான மொறுமொறுப்புடன் சிவந்து வரும். இப்போது கரம் மசாலா, புளிப்புச் சுவைக்கான ஆம்சூர் பொடி மற்றும் கைகளில் கசக்கிய கஸ்தூரி மேத்தியைத் தூவி ஒருமுறை பிரட்டி அடுப்பை அணைத்தால், கமகமக்கும் அசல் ஹோட்டல் சுவையில் ஆலு ஜீரா தயார்.