தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் சுவைக்கு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான ஒரு உணவுதான் இந்த உளுந்து சாதம். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி. இதற்கு முக்கிய காரணம் நம் உணவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதே ஆகும்.
இந்தக் குறையை நீக்கி, உடம்பை இரும்பாக மாற்றக்கூடிய ஒரு அற்புதமான பாரம்பரிய ரெசிபிதான் இது. வளரும் பெண் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதம். எந்தவிதமான குழம்பும் இல்லாமல், வெறும் எள்ளுத் துவையல் மற்றும் அப்பளத்துடன் சாப்பிடக்கூடிய இந்த அட்டகாசமான உணவை எப்படி உதிரியாகச் செய்வது என்றுதெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி - 1 கப்
கருப்பு உளுந்து - 1/2 கப்
பூண்டு - 15 பற்கள்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை!
முதலில் ஒரு வெறும் கடாயில் கருப்பு உளுந்தைச் சேர்த்து, மிதமான தீயில் நல்ல வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து கருகிவிடக் கூடாது. வறுத்த உளுந்தை ஆறவைத்து, அரிசியுடன் சேர்த்து நன்றாகக் கழுவி, சுமார் இருபது நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ச்சவும்.
எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். தாளிப்பு பொரிந்தவுடன், உரித்து வைத்துள்ள பூண்டுப் பற்களைச் சேர்த்து லேசாக வதக்குங்கள். பூண்டு எண்ணெயில் வதங்கும்போதே இந்த உளுந்து சாதம் ரெசிபிக்கான பிரத்தியேக வாசம் வீடு முழுவதும் கமகமக்கத் தொடங்கிவிடும். பூண்டு பொன்னிறமானதும், கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் உளுந்தைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.
ஒரு கப் அரிசி மற்றும் அரை கப் உளுந்துக்கு, சரியாக மூன்று கப் அளவு தண்ணீர் வைத்தால் சாதம் குழையாமல் பெர்ஃபெக்ட்டாக வரும். தண்ணீருடன் தேவையான அளவு உப்பு மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் மூன்று விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
விசில் முழுமையாக அடங்கியதும் மூடியைத் திறந்தால், ஆவி பறக்கும் சுவையான உளுந்து சாதம் தயார். கரண்டியின் காம்பால் சாதம் உடையாமல் லேசாகக் கிளறி விட்டு, சூடாகப் பரிமாறுங்கள். நல்லெண்ணெயின் வாசனையும், பூண்டின் மணமும் நிறைந்த இந்த உணவை வாரம் ஒருமுறையாவது உங்கள் குடும்பத்தினருக்குச் செய்து கொடுத்து, ஆரோக்கியத்தைக் கொண்டாடுங்கள்.
இந்த ரெசிபியை முயற்சித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.