சின்ன வெங்காயம் இருந்தா போதும்... மணக்க மணக்க கொங்குநாடு ஸ்பெஷல் ரெடி!

சின்ன வெங்காயம், பூண்டு வாசனையில் சுடச்சுட சாதத்திற்கு ஏற்ற கமகமக்கும் கொங்குநாடு ஸ்பெஷல் பருப்பு குழம்பு செய்யும் ரகசிய முறை இதோ!
பருப்பு குழம்பு paruppu kuzhambu
பருப்பு குழம்பு paruppu kuzhambuAI Image
Updated on

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் உள்ள வீடுகளில் மதிய உணவிற்குப் பெரும்பாலும் சுடச்சுட சாதமும், மணக்கும் பருப்பு குழம்பு தான் முதல் சாய்ஸ். கறிக்குழம்பையே மிஞ்சும் அளவிற்குச் சுவையாக இருக்கும் இதன் ரகசியமே, அதில் சேர்க்கப்படும் சின்ன வெங்காயமும், சீரகத்தின் மணமும் தான். 

எந்தவிதமான மசாலாப் பொடிகளும் சேர்க்காமல், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் துவரம் பருப்பை வைத்து, மிகவும் எளிமையான முறையில் அசல் கொங்குநாட்டுச் சுவையில் இதை எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு - 1 கப்

  • சின்ன வெங்காயம் - 20

  • தக்காளி - 1

  • பூண்டு - 6 பற்கள்

  • பச்சை மிளகாய் - 2

  • காய்ந்த மிளகாய் - 2

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

  • நல்லெண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

பருப்பு குழம்பு paruppu kuzhambu
பருப்பு குழம்பு paruppu kuzhambuAI Image

செய்முறை! 

முதலில் ஒரு கப் துவரம் பருப்பை இரண்டு முறை நன்றாகக் கழுவி, ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நறுக்கிய தக்காளி, 10 சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். 

குக்கரில் விசில் முழுமையாக அடங்கியதும், அதைத் திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மர மத்தை வைத்து, பருப்பை ரொம்பவும் நைஸாக இல்லாமல், லேசான கொரகொரப்புடன் கடைய வேண்டும்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு தாளிப்புக் கரண்டியை வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். கடுகு வெடித்ததும் மீதமுள்ள 10 சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அதோடு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ஜெர்மன் சமையலறையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் 'வெங்காயம்': 4 முக்கிய காரணங்கள்!
பருப்பு குழம்பு paruppu kuzhambu

வெங்காயம் நன்றாகச் சிவந்து வதங்கியதும், அந்த மணக்கும் தாளிப்பை அப்படியே நாம் கடைந்து வைத்துள்ள பருப்பு குழம்பு மேல் கொட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி ஒருமுறை நன்றாகக் கலந்து விட்டால் கமகமக்கும் அசல் கொங்குநாட்டுச் சுவை தயார். 

சுடச்சுடப் பொங்கிய சாதத்தில், இந்த மணக்கும் பருப்பு குழம்பு தாராளமாக ஊற்றி, ஒரு ஸ்பூன் நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால், அதன் சுவை உங்களை வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்லும். இதற்குத் தொட்டுக்கொள்ள ஒரு அப்பளமோ அல்லது காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலோ இருந்தால், தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது. 

இதையும் படியுங்கள்:
பிசுபிசுப்பு இல்லாத கூந்தல் மற்றும் ஜொலிக்கும் முகம் - எளிய ரகசியங்கள்!
பருப்பு குழம்பு paruppu kuzhambu

இந்த எளிய பாரம்பரிய ரெசிபியை உங்கள் வீட்டில் செய்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com