வீட்டில் சப்பாத்தி என்றாலே அதற்கு ஒரு தால் அல்லது குருமா செய்ய வேண்டுமே என்ற சலிப்பு பலருக்கும் வருவது இயற்கை. அதிலும் குழந்தைகள் பல நேரங்களில் வழக்கமான சப்பாத்தியை சாப்பிட அடம் பிடிப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் எந்த ஒரு சைட் டிஷ்ஷும் இல்லாமல், நாவில் எச்சில் ஊறவைக்கும் ஒரு அருமையான மாற்று உணவு தான் இனிப்பு சப்பாத்தி.
இது செய்வதற்கு மிகவும் எளிமையானது மட்டுமல்ல, நெய் மற்றும் சர்க்கரை உருகி வருவதால் சுவையில் தேவாமிர்தமாக இருக்கும். பள்ளியில் இருந்து சோர்வாக வரும் குழந்தைகளுக்கு மாலையில் சுடச்சுட இதை செய்து கொடுத்தால், இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு
செய்முறை!
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். நெய் சேர்ப்பதால் மாவு மிகவும் சாஃப்ட்டாக வரும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாகப் பிசைந்து, மாவு காயாமல் இருக்க ஒரு 15 நிமிடம் தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.
பிசைந்த மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளை எடுத்து, சப்பாத்தி கட்டையில் சிறிய வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். அதன் நடுவில் அரை ஸ்பூன் நெய் தடவி, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய்த் தூளைத் தூவி, மாவை எல்லா பக்கங்களில் இருந்தும் கொழுக்கட்டை போல மூடி மீண்டும் உருண்டையாக்கிக் கொள்ளவும்.
இப்போது மெதுவாக, உள்ளே இருக்கும் சர்க்கரை வெளியே வராதபடி சற்று தடிமனான சப்பாத்தியாகத் தேய்க்க வேண்டும். வழக்கமான வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தினால் இந்த இனிப்பு சப்பாத்தி இன்னும் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கும்.
இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மிதமான சூட்டில் காய விடவும். கல் காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, சுற்றிலும் தாராளமாக நெய் விட்டு இரண்டு பக்கமும் நல்ல பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். அடுப்பை அதிக தீயில் வைத்தால் சர்க்கரை உருகி கருகிவிடும், எனவே மிதமான தீயில் சுடுவது முக்கியம்.
உள்ளே இருக்கும் சர்க்கரை உருகி பாகு போல மாறி, நெய்யின் மணத்தோடு சேர்ந்து வரும்போது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். எந்த குழம்பும் இல்லாமல் சட்டென்று செய்து முடிக்கும் இந்த கமகமக்கும் இனிப்பு சப்பாத்தி ரெசிபியை உங்கள் வீட்டில் இன்றே செய்து குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துங்கள்.