

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டையில் துவையலோ குழம்போ செய்தால் வீட்டில் யாருமே சாப்பிட மாட்டார்கள். ஆனால் கும்பகோணத்தைச் சேர்ந்த தோழி செய்து கொடுத்த பிரண்டை தொக்கு மிகவும் ருசியாக இருந்ததால் நிமிடத்தில் காலியாகிவிட்டது. அந்த சுவையான பிரண்டை தொக்கு சீக்ரெட் ரெசிபிக்கு காரணம் இந்தப் பொருளை சேர்ப்பதுதான். ஒருமுறை வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் செய்து தரச் சொல்வார்கள்..
தேவை:
இளம் பிரண்டை - 1 கப்
வறுத்துப் பொடிக்க, (மல்லி விதை (தனியா), வெந்தயம்
உளுத்தம்பருப்பு, வெள்ளை எள், மிளகு) – தலா 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
புளி - நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
மல்லி தழை - சிறிது
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
வெல்லம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பிரண்டையை நார் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை சிவக்க வறுத்துப் பொடிக்கவும். பிறகு அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை விட்டு பிரண்டை மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு கலர் மாறும் வரை வதக்கவும். அந்த சூட்டிலேயே கருவேப்பிலை, இஞ்சி, மல்லித் தழை மற்றும் புளியைச் சேர்க்கவும். கலவை நன்றாக ஆறியவுடன் அதனுடன், வறுத்துப் பொடித்த பொடி மற்றும் உப்பு, வெல்லம் சேர்த்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து எடுக்கவும்.
இந்த பிரண்டை தொக்கு செய்ய கருவேப்பிலை சேர்ப்பது அவசியம். வறுத்த எள் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதுதான் சீக்ரெட். மேலும் பச்சை மிளகாயை நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். வெல்லம் சேர்ப்பது சுவையைக் கூட்டும். பிரண்டை இளசாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். இந்த தொக்கு வாயில் போட்டவுடன் அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும்.