

சூடான இட்லியுடன் சாம்பார் மற்றும் சட்னிதான் பெரும்பாலான வீடுகளில் சிறந்த எளிமையான காலை உணவாக இருக்கிறது. முன்பு விசேஷ நாட்களில் மட்டும் சாப்பிடும் ஒரு சிற்றுண்டியாக இருந்த இட்லிகள், இன்று அன்றாட, ஆரோக்கியமான ஒரு முக்கிய உணவாக மாறிவிட்டன .
இட்லி, மாவுச்சத்து மற்றும் புரதத்தின் ஒரு சரியான கலவையாகும். இது நீராவியில் வேகவைக்கப்படுவதோடு, கொழுப்புச்சத்தும் குறைவாக உள்ளது. இதில் புளிக்கவைக்கும் செயல்முறை பயன்படுத்தப்படுவதால், குடல் ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது.
மேலும், அரிசி மற்றும் பருப்பு வகைகளின் கலவையானது, இதில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் நல்ல சமநிலையை அளிக்கிறது. இவ்வுணவு எளிமையானது, மலிவானது மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடியது.
இன்று, இட்லிகள் வெறும் அரிசியில் மட்டும் செய்யப் படுவதில்லை.. அவை சோளம், தினை போன்ற சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளைக் கொண்டும் செய்யப்படுகின்றன. நாம் இட்லியை ரசித்துச் சாப்பிடும் விதமும் மாறிவருகிறது. பொடி மினி இட்லி ரசம் மினி இட்லி, பென்னே பொடி இட்லி கார இட்லி, மசாலா இட்லி ஃப்ரை போன்ற அட்டகாசமான வெரைட்டிகளுடன் இது புதுமையாகி வருகிறது. மேலும் பிரபலமாகி வரும் கேரளா ராமசேரி இட்லி, ஆந்திரா பனசாக்கு இட்லி, தட்டே இட்லி, கார கூர்க் இட்லி, மலபார் ஸ்டூ இட்லி போன்ற பல பிராந்திய இட்லி உணவுகளையும் மக்கள் சுவைத்து மகிழ்கிறார்கள். அதிலும் கேரளா ராமசேரி இட்லி வேற லெவல்.
கேரளாவில் உள்ள பாலக்காடுக்கு அருகிலுள்ள ராமசேரி என்ற சிறிய கிராமத்தின் ஒரு தனித்துவமான உணவு வகையே ராமசேரி இட்லிகள் ஆகும். இந்த இட்லிகள் பாலக்காடு பகுதியில் இருந்து கிடைக்கும் உள்ளூர் அரிசியைப் பயன்படுத்தித்தி தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான இட்லிகளைப் போலல்லாமல், இவை மென்மையான, பஞ்சுபோன்ற தன்மை மற்றும் தட்டையான, வட்ட வடிவத்திற்காகப் பெயர் பெற்றவை. இவற்றை உண்மையிலேயே தனித்துவமாக்குவது, பாரம்பரிய தயாரிப்பு முறையே ஆகும்.
அரிசி, உளுந்து, வெந்தயம் மற்றும் கல் உப்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாவுக்கலவை, ஒரு மண் பானையின் வாயின் மீது விரிக்கப்பட்ட மஸ்லின் துணியின் மீது ஊற்றப்படுகிறது. இட்லிகள் ஆவியில் வேகும்போது, அந்த நீராவி நேரடியாகத் துணி வழியாகச் செல்வதால், அவை இலேசான பதத்தைப் பெறுகின்றன. நீராவியை உள்ளே தக்கவைப்பதற்காக, அதன் மேல் மற்றொரு மண்பானை வைக்கப்படுகிறது.
இதனால் இட்லிகள் இருபுறமும் சமமாக வேகிறது. இந்த இட்லிகள் தோசையைப்போல பெரிதாக, மிகவும் மென்மையாக அல்டிமேட் சுவையுடன் இருக்கிறது. பாலக்காடு மட்டா அரிசியுடன் பருப்புகள், வரமிளகாய் சேர்த்து வறுத்தரைத்த தனித்துவமான இட்லி பொடியுடன் பரிமாறப்படுகின்றன
நவீன வசதிகள், குறிப்பாக நகர்ப்புறங்களில், இட்லிகள் செய்வதை நிச்சயமாக மிகவும் எளிதாக்கியுள்ளன. மாவு தயாரிக்கும் மேம்பட்ட உபகரணங்களும் இந்தச் செயல்முறையை எளிதாக்குகின்றன, ஆனால் பாரம்பரியமான ஊறவைத்தல், அரைத்தல் மற்றும் புளிக்கவைத்தல் முறைகள் மூலம் கிடைக்கும் சுவையை முழுமையாகப் நவீன முறைகள் தர முடியாது.