

கொத்தவரங்காய் சட்னி
தேவை:
கொத்தவரங்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1/2 நடுத்தர அளவு
காய்ந்த மிளகாய் - 3-4
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தவரங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தவரங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவையை ஆறவிட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். வித்தியாசமான சுவையில் கொத்தவரங்காய் சட்னி தயார்.
கொத்தவரங்காய் கார குழம்பு
தேவை:
கொத்தவரைங்காய் - கால் கிலோ
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
சாம்பார் வெங்காயம் - 10
சீரகம், கடுகு - தலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் கொத்தவரங்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கொத்தவரங்காயும் வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் அதனுடன் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து புளியும் மிளகாய் தூளும் பச்சை வாசனை போகும் அளவு நன்றாக கொதிக்கவிடவும்..
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், சாம்பார் வெங்காயம் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும்போது அரைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாக வரும் அளவு கொதிக்க விடவும்.. கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிடவும். கடாய் வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.. சூடான சுவையான கொத்தவரங்காய் காரக்குழம்பு தயார்.
கொத்தவரங்காய் மசாலா
தேவை:
நறுக்கிய கொத்தவரங்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1 கப்
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, சீரகம், மஞ்சள் தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கொத்தவரங்காயை காய் முழுகும் வரை தண்ணீர்விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அவற்றுடன் கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய் தூள், வேர்க்கடலை தூள், தேங்காய், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்தவுடன் இறக்கவும். சுவையான கொத்தவரங்காய் மசாலா ரெடி. சாதம் மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கொத்தவரங்காய் புட்டு
தேவை:
கொத்தவரங்காய் - கால் கிலோ,
பொட்டுக்கடலை மாவு - 50 கிராம்,
கடுகு, மிளகாய் தூள் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய கொத்தவரங்காயைப் போட்டு லேசாக வதக்கி, பெருங்காயத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
இதில், அரை கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து மூடி போட்டு வேகவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் வற்றியதும், கடலை மாவு தூவி நன்றாகச் சிவக்கும் வரை கிளறி இறக்கவும். சுவையான கொத்தவரங்காய் புட்டு தயார்.