தாமரை தண்டு பற்றி கேள்விப்படும் பலருக்கு அது ஒரு காய்கறி என்று தெரியாது. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் அற்புத நன்மைகள் தாமரைத் தண்டில் உண்டு. ஆனால் இதை பெரும்பாலும் யாரும் சமைத்து சாப்பிட மாட்டார்கள் என்பதால், சத்து மிக்க இந்த உணவை நாம் தவிர்த்து வருகிறோம். தாமரை தண்டை உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதேபோல நாம் சராசரி காய்கறிகளை சமைப்பது போல பொரியல் மற்றும் கூட்டு செய்தாலும் சுவை நன்றாக இருக்கும்.
தாமரை தண்டுக்கு உடல் வெப்பத்தை குறைத்து வயிற்றுப்போக்கை நிறுத்தும் ஆற்றல் உண்டு. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்கும். பசியை மேம்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. மூக்கு மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு உள்ளவர்கள் தாமரை தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இந்த பதிவில் தாமரை தண்டு பயன்படுத்தி சுவையான பொரியல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தாமரை தண்டு - 1 கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கடுகு - ½ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
வேர்க்கடலை தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - ¼ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் தாமரை தண்டை நன்றாகக் கழுவி, இட்லி குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை துண்டு துண்டாக வெட்டவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஓரமாக வைத்து விடுங்கள்.
தாமரை தண்டை வெட்டும்போது வாழைத்தண்டு போலவே நார் இருக்கும். அதை நீக்க வேண்டியது அவசியம். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் தக்காளி வதங்கியதும் தாமரை தண்டை சேர்த்து, தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடுங்கள். தாமரை தண்டு நன்கு வெந்ததும் இறுதியில் தேங்காய் துருவல், வேர்க்கடலை தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சூப்பர் சுவையில் தாமரைத் தண்டு பொரியல் தயார்.