

தமிழகத்தில் கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து கோடை வெப்பத்தை சமாளிக்க குளிர்பானங்களைத்தேடி மக்கள் செல்கின்றனர். மதுரை 'மல்லி' எந்த அளவுக்கு பிரசித்தி பெற்றதோ, அந்த அளவிற்கு மதுரைக்கு பெயர் சேர்ப்பதாக 'ஜிகர்தண்டா 'உள்ளது. பெயருக்கு ஏற்றார் போல 'ஜிகர்' (மனம்) 'தண்டா' (குளிர்ச்சி) எந்தத் தீங்கும் விளைவிக்காத குளிர் பானங்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் ஜிகர்தண்டா செய்முறை குறித்து இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பால் -1 லிட்டர் (சுண்டக் காய்ச்சியது)
பாதாம் பிசின் - 20 கிராம் (இரவு ஊற வைத்தது)
கடற்பாசி (Agar Agar) - சிறிதளவு
சர்க்கரை -தேவையான அளவு
நன்னாரி சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
பாலாடை (Malai) - சிறிதளவு
வெண்ணிலா அல்லது ஜிகர்தண்டா ஐஸ்கிரீம் - ஒரு ஸ்கூப்
செய்முறை:
பால் காய்ச்சுதல்
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு சுண்டும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ரப்ரி பதம் வரும் வரை கைவிடாமல் பழுப்பு நிறமாக மாறும் வரை கிளற வேண்டும். ஏனெனில் ஜிகர்தண்டாவின் சுவைக்கு இதுதான் முக்கியக் காரணம்.
பாதாம் பிசின் தயாரிப்பு
முதல் நாள் ஊறவைத்த பாதாம் பிசின்
மறுநாள் காலையில் பிசின் போல ஜெல்லியாக மாறி இருப்பதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கலவை தயாரித்தல்
ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொண்டு 2 ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசினை போட்டு, அதன் மேல் நன்னாரி சிரப்பை ஊற்றி அதனுடன் காய்ச்சி ஆறவைத்த சுண்டக் காய்ச்சிய தடிமனான பாலை ஊற்ற வேண்டும். பிறகு ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீம், சிறிதளவு பாலாடை (Malai) ஆகியவற்றை அதன் மேல் சேர்த்து பரிமாறினால் சுவையான மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா தயாராகிவிடும்.
ஜிகர்தண்டா நன்மைகள்
ஜிகர்தண்டா தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை. உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சியை வழங்கும்' பாதாம் பிசின்' கோடையில் ஏற்படும் உடல் சூடு ,வயிற்று எரிச்சல் மற்றும் சிறுநீரகக் கடுப்பு போன்றவற்றை போக்கும் தன்மைகொண்டது.
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மைகொண்ட நன்னாரி வேரிலிருந்து தயாரிக்கப்படும் நன்னாரி சிரப் உடலின் செரிமானத்தை மேம்படுத்தி கோடையில் ஏற்படும் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கிறது. உடல் சூட்டை தணிப்பதோடு மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த கடற்பாசிக்கு (Agar Agar) தனிஇடம் உண்டு. கோடைகாலத்தில் ஏற்படும் சோர்வை நீக்குவதோடு உடனடி ஆற்றலை வழங்கும் புரதமும் கால்சியமும் பாலில் அதிக அளவில் உள்ளது.
இயற்கையான முறையில் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவில் செயற்கையான நிறமூட்டிகளும், அதிகப்படியான சர்க்கரையும் இல்லாததால் மற்ற குளிர்பானங்களை விட மிகச் சிறந்ததாகும். ஆனாலும் சளி தொந்தரவு உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இதை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.