
வீட்டில் இருக்கும் சிறுதானியங்களை கழுவி காயவைத்து, வறுத்து அதனுடன் ஏலக்காய், சுக்கு சேர்த்து பொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் தேவையான பொழுது எடுத்து அதில் உருண்டைகள் முதல் உப்புமா வரை செய்து சுவைக்கலாம். சட்டென்று விருந்தினர் வந்தாலும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தால் இதில் இருந்து இனிப்பு காரம் என்று செய்து கொடுத்து அசத்தலாம்.
இனிப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த பணிவரகு, வரகு, சாமை, கம்பு, குதிரைவாலி பொட்டுக்கடலை பச்சை பயிறு தலா- கால் கப்
வெல்ல துருவல்- 500 கிராம்
நெய்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி, ஏலப் பொடி- அரை டீஸ்பூன்
நெய்யில் வறுத்த தேங்காய் பல்- ஒரு டேபிள் ஸ்பூன்
வறுத்த எள்-1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வறுத்த தானிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை கொதிக்க விட்டு வெல்லத்தைப் போட்டு கம்பி பாகு பதம் வைக்கவும். இப்பொழுது பொடித்த மாவுடன் வாசனைப் பொருட்களையும், வறுத்த எள், தேங்காய் அனைத்தையும் வெல்லப்பாகில் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் நெய் கலந்து நன்றாக கிளறி வேண்டிய வடிவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். கம கம வாசனையுடன் சாப்பிடுவதற்கு நல்ல ருசியாக இருக்கும். திகட்டாமலும் இருக்கும். சத்துக்கு சொல்ல வேண்டுமா?
எளிமையாய் செய்ய புரோட்டின் தால் மிக்சர்
செய்ய தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு , வெள்ளை பட்டாணி, கொள்ளு ,சுண்டல் தலா -100 கிராம்
முந்திரி பருப்பு, வேர்க்கடலை தலா- கைப்பிடி அளவு
கருவேப்பிலை- கைப்பிடி அளவு
மிளகாய் ,மிளகுத்தூள் தலா-ஒரு டீஸ்பூன்
சர்க்கரை- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ,மஞ்சள் தூள் தலா- இரண்டு சிட்டிகை
நீளமாக சீவிய முற்றிய தேங்காய்துண்டுகள்-9
காரமில்லாத காஷ்மீரி மிளகாய்- 4
உப்பு -தேவைக்கேற்ப.
செய்முறை:
பயறு வகைகளை முதல் நாள் இரவு தனித்தனியாக ஊறவிட்டு அடுத்த நாள் நிழலில் நன்றாக காயவிட்டு எண்ணெயில் தனித்தனியாக வலைக்கரண்டியில் போட்டு எண்ணெயில் பிடித்து பொரித்தால் ஒரே சீராக பொரியும் . பின்னர் முந்திரி பருப்பு வேர்க்கடலையையும் இவ்வாறு வறுத்து கருவேப்பிலையை பொரிக்கவும். நீளமாக விரல் அளவு சீவிய தேங்காய் துண்டுகள், நான்கு மிளகாய் ஆகியவற்றை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, காரப்பொடிகள், சர்க்கரை பெருங்காயம், மஞ்சள் பொடி அனைத்தையும் இதனுடன் சேர்த்துக் குலுக்கி கலந்து ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும் நேரம் வந்துவிட்டது. தினசரி இதை ஸ்நாக்ஸாக பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். வீட்டிலும் சாப்பிடுவார்கள். நாமும் கொஞ்சம் ருசிக்கலாமே.