

தமிழகத்து காலை உணவுகளில் முடிசூடா மன்னனாகத் திகழ்வது வெண் பொங்கல். சூடான பொங்கலும், அதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ச் சட்னியும், சாம்பாரும் இருந்தால் அந்த நாளே உற்சாகமாகத் தொடங்கும். பலரும் விடுமுறை நாட்களில் சரவண பவன் அல்லது மற்ற பிரபலமான உணவகங்களுக்குச் சென்று பொங்கல் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
அதற்குக் காரணம், அங்கு கிடைக்கும் பொங்கல் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் அளவுக்கு மென்மையாகவும், சுவையாகவும் இருப்பதுதான். ஆனால் நாம் ஆசை ஆசையாக வீட்டில் செய்யும்போது, அது சூடாக இருக்கும் வரை நன்றாக இருக்கும், ஆனால் நேரம் செல்லச் செல்ல இறுகிப்போய் ஒரு கேக் துண்டு போல மாறிவிடும். இந்த ஏமாற்றத்தைத் தவிர்த்து, வீட்டிலேயே ஹோட்டல் தரத்தில் பொங்கல் செய்வதற்கான எளிய வழிமுறைகளை தெரிந்துகொள்வோம் வாங்க.
அரிசி பதம்!
பொங்கல் நன்றாகக் குழைந்து வருவதற்கு அரிசியின் பதம் மிக முக்கியம். முழு அரிசியைப் அப்படியே பயன்படுத்துவதை விட, அதைச் சற்று உடைத்துப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். நீங்கள் பயன்படுத்தும் பச்சரிசியைச் சுத்தமாகக் கழுவி, சுமார் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அரிசி ஊறிய பிறகு, அதைத் தண்ணீர் இல்லாமல் வடித்து, ஒரு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ரவை பதத்திற்கு அல்லது குருணையாக உடைத்துக் கொண்டால், பொங்கல் வெந்து வரும்போது மிகவும் குழைவாகவும், சாப்பிடுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.
சரியான விகிதம்!
அரிசியும் பருப்பும் சரியான அளவில் சேரும்போது தான் பொங்கலின் சுவை கூடும். ஹோட்டல்களில் பயன்படுத்தும் கணக்குப்படி, ஒரு பங்கு அரிசிக்குக் குறைந்தது முக்கால் பங்கு பாசிப்பருப்பு சேர்ப்பார்கள். அதாவது நீங்கள் ஒரு டம்ளர் அரிசி எடுத்தால், அரை டம்ளருக்கும் அதிகமாகப் பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்பையும் அரிசியையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைப்பது, இரண்டும் ஒரே நேரத்தில் வெந்து கூழ்மமாக மாற உதவும்.
வேகவைக்கும் முறை!
பொங்கலுக்குத் தண்ணீர் வைப்பதில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது. நாம் உடைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பு கலவைக்கு, ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குக்கரில் வைக்கும்போது குறைந்தது நான்கு விசில்கள் விட்டு, ரவையும் பருப்பும் நன்றாகக் குழைந்து இருப்பதை உறுதி செய்யவேண்டும். தாளிப்பதற்குச் சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முழுவதும் நெய்யைப் பயன்படுத்தினால் அதன் மணம் வீடு முழுவதும் வீசும். மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி மற்றும் கறிவேப்பிலையை நெய்யில் வறுத்துக் கொட்ட வேண்டும்.
ரகசியப் பொருள்!
இங்குதான் அந்த முக்கிய ரகசியம் ஒளிந்துள்ளது. பொதுவாக நாம் குக்கரைத் திறந்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கி விடுவோம். ஆனால் ஹோட்டல்களில் அவர்கள் இறுதியாக ஒரு பொருளைச் சேர்க்கிறார்கள். அதுதான் காய்ச்சாத பால். பொங்கல் வெந்து, தாளித்த பிறகு, அதில் சுமார் 300 மில்லி அளவிற்குத் திக்கான பாலை ஊற்றிக் கிளறவேண்டும்.
இந்தப் பால் பொங்கலோடு சேரும்போது, அது இறுகுவதைத் தடுத்து, நீண்ட நேரத்திற்குத் தளதளவென இருக்கச் செய்கிறது. இதுவே அந்த மென்மையானத் தன்மையை அளிக்கிறது.