தமிழர்களின் பாரம்பரிய உணவில் தோசை முக்கிய இடம் பிடித்துள்ளது. பொதுவாகவே அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாவில் தோசை சுடுவோம். ஆனால், எதிர்பாராத சூழ்நிலைகளில் தோசை மாவு இல்லாத சமயத்தில் வீட்டில் எளிதாக கிடைக்கும் பொரியைப் பயன்படுத்தி சுவையான தோசை செய்யலாம். இந்தப் பதிவில் பொரியைப் பயன்படுத்தி தோசை செய்வது எப்படி என விரிவாகக் காண்போம்.
பொரி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பொரி - 2 கப்
கோதுமை - ½ கப்
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தோசை சுட தேவையான அளவு
செய்முறை:
முதலில் பொரியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால், பொறி மென்மையாக மாறிவிடும்.
பின்னர், ஊற வைத்த பொறியை மிக்ஸியில் சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைக்க வேண்டும். இதில் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக அதில் கோதுமை மாவை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்தக் கலவையில் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தயிர் தோசைக்கு சுவையையும் பஞ்சு போன்ற தன்மையையும் கொடுக்கும்.
தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இப்போது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள தோசை மாவை ஊற்றி வட்ட வடிவில் பரப்பவும். இறுதியாக, தோசையை இருபுறமும் வேக வைத்தால் சூப்பரான சுவையில் இன்ஸ்டன்ட் பொரி தோசை தயார்.
இந்த தோசையை தோசை மாவு அரைக்கும் செயல்முறை இல்லாமலேயே நீங்கள் எளிதாக செய்யலாம். பொரியை ஊற வைத்து அரைத்து தோசை சுடுவதற்கு அதிக நேரம் எடுக்காது. பொரி தோசை உண்மையிலேயே சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும். இதில் தயிர் மற்றும் கோதுமை கலப்பதால், புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
திடீரென உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால்கூட இந்த பொரிதோசையை விரைவாக செய்து கொடுத்து அசத்தலாம். இன்றே இந்த அட்டகாசமான ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.