

ஹோட்டல்களில் கிடைக்கும் "கடாய் வெஜிடபிள்" மற்ற கிரேவிகளைவிட சற்று வித்தியாசமானது. இதில் காய்கறிகள் குழையாமல் 'நறுக்' என்ற பதத்தில் இருக்கும். அதே சமயம், ஃப்ரெஷ்ஷாக அரைத்த மசாலாவின் வாசம் மூக்கைத் துளைக்கும். கடாய் பன்னீருக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை; பன்னீருக்குப் பதில் இதில் நிறையக் காய்கறிகள் இருக்கும்.
பலரும் வீட்டில் செய்யும்போது, காய்கறிகளை ரொம்பவும் வேகவைத்து சாம்பார் போல ஆக்கிவிடுவார்கள். ஆனால், ஹோட்டல் சுவை வர வேண்டுமென்றால் சில சின்ன ட்ரிக்ஸ் இருக்கிறது. வாருங்கள், அந்த சூப்பர் ரெசிபியைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடாய் மசாலா செய்ய:
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
மிளகு - ½ டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - ½ டீஸ்பூன்.
காய்கறிகள்:
கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, பட்டாணி - 2 கப்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
கிரேவி செய்ய:
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 ½ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்/வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு, கொத்தமல்லி தழை.
செய்முறை:
இந்த டிஷ்ஷின் ஆத்மாவே இந்த மசாலாதான். ஒரு வெறும் கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீகம், சோம்பு ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். வாசனை கமகமவென்று வரும்போது அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். நைஸாக அரைக்கக் கூடாது, அதுதான் ஹோட்டல் ஸ்டைல் ரகசியம்.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் போன்ற கடினமான காய்கறிகளைத் தனியாகச் சுடுநீரில் போட்டுப் பாதி அளவு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முழுவதுமாக வேகக்கூடாது.
பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெங்காய இதழ்களை மட்டும் தனியாகப் போட்டு, அதிக தீயில் 2 நிமிடம் வதக்கி எடுக்கவும். இது க்ரிஸ்பியாக இருக்க வேண்டும். அதே எண்ணெயில் பாதி வெந்த மற்ற காய்கறிகளையும் போட்டு லேசாக வதக்கித் தனியாக வைக்கவும்.
இப்போது கடாயில் எண்ணெய் மற்றும் சிறிது வெண்ணெய் ஊற்றவும். சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை ஊற்றவும். இதோடு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.
கிரேவி தயாரானதும், நாம் அரைத்து வைத்துள்ள அந்த ஸ்பெஷல் "கடாய் மசாலாவை" 2 ஸ்பூன் சேர்க்கவும். மசாலா வாசனை வந்ததும், வதக்கி வைத்துள்ள எல்லா காய்கறிகளையும் உள்ளே கொட்டவும்.
காய்கறிகள் மசாலாவோடு சேரும்படி பிரட்டி விடவும். தேவைப்பட்டால் மிகக் குறைவாகச் சுடுதண்ணீர் தெளிக்கலாம். கடாய் வெஜிடபிள் மிகவும் தளர்வாக இருக்கக்கூடாது, செமி-கிரேவியாக இருந்தால்தான் ருசி.
கடைசியாக, காய்கறிகள் மசாலாவை உறிஞ்சிய பிறகு, கஸ்தூரி மேத்தியைக் கசக்கித் தூவவும். ஹோட்டல் ரிச்னஸ் வேண்டும் என்றால், இறக்கும் முன் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றலாம். மேலே நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கவும்.
அவ்வளவுதான், அட்டகாசமான சுவையுடன் "கடாய் வெஜிடபிள்" தயார். இதைச் சூடான நான், குல்ச்சா அல்லது ருமாலி ரோட்டியுடன் வைத்துச் சாப்பிட்டால், இன்னும் இரண்டு ரோட்டி எக்ஸ்ட்ரா வாங்கியிருக்கலாமே என்று தோன்றும். காய்கறி சாப்பிடாத குழந்தைகளைக் கூட ஏமாற்றிச் சாப்பிட வைக்க இது ஒரு சிறந்த வழி. இந்த வாரம் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி அசத்துங்கள்.