சமையலில் ருசியை கூட்டும் அசத்தலான சில குறிப்புகள்!

amazing tips for cooking
Samayal tips
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை எடுத்துவிட்டு வட்ட வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்ய முறுமுறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.

குழம்பு ருசியாகவும் கெட்டியாகவும் இருக்க சின்ன வெங்காயம் ஆறு, பீர்க்கங்காய் நாலு துண்டுகள், வெந்தயம் அரை ஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன், தனியா ஒரு ஸ்பூன் ஆகியவற்றை நன்கு வறுத்து அரைத்து சேர்க்க மிகவும் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காயை சாம்பாரும் பொரியலும் செய்வதை விட பக்கோடாக்களாக செய்ய அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெண்டைக்காய்களை மெல்லிய வட்டங்களாக நறுக்கி கடலை மாவு, உப்பு, காரத்தூள், கரம் மசாலா, சிறிது கருவேப்பிலை சேர்த்து 2 ஸ்பூன் தயிர் கலந்து எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்க மிகவும் சுவையான பக்கோடா தயார்.

கட்லட் செய்யும்பொழுது பொடியாக நறுக்கிய கீரையும், தட்டிய இஞ்சியும் சேர்த்து பிசைந்து பொரிக்க சத்தும் சுவையும் கூடும்.

ஆப்பம் செய்யும் பொழுது மெத்தென்று ஸ்பாஞ்ச் போல் வருவதற்கு ஒரு ஸ்பூன் மைதா மாவு, அரை கப் பாலும் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும் மெத்தென்றும் இருக்கும்.

ஊறுகாய் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்க அதற்கு தேவையான உப்பும், எண்ணெயும் அவசியம். 5 கப் நறுக்கிய மாங்காய்க்கு 3/4 கப் உப்பு, 3/4 கப் காரப்பொடி, 1/4 கப் கடுகுப் பொடி, 1/4 கப் நல்லெண்ணெய், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து செய்ய ஒரு வருடம் ஆனாலும் கெடாது. எலுமிச்சங்காய், கிடாரங்காய் போன்ற ஊறுகாய்களுக்கும் இதே அளவுதான்.

இதையும் படியுங்கள்:
உவகை தரும் நான்கு வகை உளுந்து ரெசிபிகள்!
amazing tips for cooking

ரவை உப்புமா மீந்துவிட்டால் அதில் அரிசி மாவு சிறிது, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து வடைபோல தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க ருசியான ஸ்நாக்ஸ் தயார்.

வெயிலுக்கு தோசை மாவு புளித்துவிட்டால் ஒரு கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும். இரண்டு மணிநேரம் கழித்து மேலாக தெளிந்த தண்ணீரை வடித்துவிட்டு தோசையோ, குழிப்பணியாரமோ செய்ய புளிப்பு சிறிதும் தெரியாது.

சாம்பார், புளிக் குழம்பு, வத்த குழம்பு என எது வைத்தாலும் கடைசியாக இறக்கியதும் தனியா பொடியும், வெந்தய பொடியும், சிறிதளவு நல்லெண்ணெயும் விட்டு கலந்து மூடிவைக்க மணமும் ருசியும் கூடும்.

எந்த பொரியல் செய்தாலும் கடைசியாக தேங்காய், மிளகாய், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அடித்து சேர்த்து செய்ய ருசியும் மணமும் அதிகரிக்கும்.

மோர் மிளகாய் போடுவதற்கு ஏற்ற சீசன் இது. மிளகாய் வாங்கி ஊசியால் நான்கைந்து துளைகள் போட்டு வைக்கவும். வெந்தயத்தை சிறிது தயிரில் ஊறவைத்து உப்பு சேர்த்து அரைத்து புளித்த மோரில் கலந்து அதில் மிளகாயை போட்டு வைத்து ஊறியதும் வெயிலில் காய வைத்து எடுக்க மணமான மோர் மிளகாய் தயார்.

இதையும் படியுங்கள்:
ஹெல்தியான Ragi mudde மற்றும் மக்கானா சப்பாத்தி ரெசிபி!
amazing tips for cooking

கோஸ் பொரியல், பீன்ஸ் பொரியலுக்கு எல்லாம் கடைசியில் குழைவாக வேகவிடாமல் சிறிது உதிர் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்க ருசி கூடும்.

இட்லி பொடி செய்யும்பொழுது சிறிது எள், மிளகு, கொட்டை பாக்களவு புளியும் சேர்த்து வறுத்து இட்லி பொடி அரைக்க ருசியும் மணமும் கூடும்.

வெயில் காலத்தில் தயிர் பச்சடியை தினமும் உணவில் சேர்த்து வர வயிறு குளுமை அடையும். வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, தக்காளி, வெங்காயம், கோஸ், ஸ்வீட்கார்ன், வெண்டைக்காய் போன்றவற்றைக் கொண்டு தினம் தினம் பச்சடி செய்து சாப்பிட வயிறு குளுமை அடையும்.

logo
Kalki Online
kalkionline.com