இந்த ஒரு எள்ளு பொடி செய்து வைத்துக் கொண்டால் போதும், இட்லி, தோசை, சாதம் என அனைத்துக்கும் பயன்படுத்தலாம். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒன்றாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - ½ கப்
உளுந்து - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
வரமிளகாய் - 10
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் எள், வரமிளகாய், உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் புளி, பூண்டை வானலியில் வதக்கி, கருவேப்பிலையையும் உப்பையும் தனியாக சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அனைத்தையும் ஆறவைத்த பிறகு, ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் எள்ளைத் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பொடிக்க வேண்டும். எல்லாம் நன்கு பொடியானதும் இறுதியில் தான் எள்ளை சேர்த்து பொடி செய்ய வேண்டும்.
ஏனெனில் எள்ளை முதலிலேயே போட்டால் அதிலிருந்து எண்ணெய் வெளியேறும். அதனால் பொடியின் பதம் கிடைக்காது. நன்கு பொடி பதத்திற்கு வேண்டுமென்றால் எள்ளை இறுதியில் தான் சேர்த்து அரைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான எள்ளு பொடி தயார். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
(இதன் சுவை நன்றாக இருக்க எள் வாங்கும்போது நல்ல எள்ளாக பார்த்து வாங்குங்கள். அதேசமயம் வரமிளகாயை வறுக்கும்போது காம்பை நீக்கக்கூடாது. வறுத்து முடித்துப் பின்னரே நீக்க வேண்டும்.)