
புளி பொங்கல்:
பச்சரிசி 1 கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
புளி எலுமிச்சையளவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
வறுத்து பொடிக்க:
தனியா 1 ஸ்பூன், மிளகாய் 4
தாளிக்க:
மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி 6 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் விடவும். புளியை 1 கப் நீரில் நீர்க்க கரைத்து வைக்கவும். தனியா, மிளகாய் இரண்டையும் வாணலியில் வறுத்து நைசாக பொடித்து வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து மிளகு பொரிந்ததும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து, வெந்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையைக் கலந்து நன்கு கிளறவும். மேலும் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு கிளறி பரிமாற மிகவும் ருசியான புளி பொங்கல் தயார்.
கீரைப் பொங்கல்:
பச்சரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
கீரை 1 கட்டு
சின்ன வெங்காயம் 10
பூண்டு 4 பற்கள்
பச்சை மிளகாய் 2
நெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க: மிளகு, சீரகம், கறிவேப்பிலை, நெய்
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியுடன் பருப்பை சேர்த்து கழுவி 6 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் விடவும். பாதி வெந்திருக்கும். இப்பொழுது பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு, நெய் 2 ஸ்பூன் விட்டு குக்கரில் வைத்து மேலும் இரண்டு விசில் விடவும். கடைசியாக ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்த மிளகுத்தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து பரிமாற சத்தான கீரை பொங்கல் தயார்.
இரண்டு பொங்கலுக்குமே சூப்பரான ஜோடி இந்த தும்கூர் சட்னிதான்.
தும்கூர் சட்னி:
உளுந்து 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
தேங்காய் 1/2 கப்
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 4 பற்கள்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
புதினா 1 கைப்பிடி
கொத்தமல்லி 1 கைப்பிடி
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சுத்தம் செய்த புதினா மற்றும் கொத்தமல்லி தழைகள் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும் தேங்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொட்ட ருசியான தும்கூர் சட்னி தயார்.
இட்லி, தோசை, பொங்கல் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும் இந்த சட்னி.