

வீட்டில் எல்லோரும் முகம் சுளிக்கும் சுண்டைக்காயை, பாட்டி ரகசியங்களால் கசப்பே தெரியாமல் வத்தல் குழம்பாக மாற்றும் முறையை இந்தக் கட்டுரை விளக்குகிறது. நல்லெண்ணெயில் வத்தலை பொன்னிறமாக வறுத்து, மசாலா விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைப்பது சுவைக்கு காரணம். மோர் ஊறல், கருகாமல் வறுத்தல், வெல்லம் சேர்த்தல் போன்ற யுக்திகள் கசப்பை சமநிலைப் படுத்துகின்றன.
சுண்டைக்காய் என்றாலே வீட்டில் முகம் சுளிப்பார்கள் ஏன் என்றால் அதன் கசப்புத்தன்மை அப்படி ஆனால் அந்த கசப்பையும் சுவையான ஆரோக்கியமான உணவாக மாற்றி செய்து கொடுப்பார்கள் நம் பாட்டிகளின் சமையலில் என்னதான் ரகசியம் இருக்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்
முதலில் சுண்டைக்காய் வத்தல் குழம்பு
செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல் – ½ கப்
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 10–15 No
பூண்டு – 6–8 பல்
தக்காளி – 2 No
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1/4 கப்
கடுகு – ½ ஸ்பூன்
வெந்தயம் – ¼ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் புளியை ஊறவைத்து கரைத்து, சுமார் 2 கப் அளவு புளிக்கரைசல் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
சுண்டைக்காயை வறுப்பதற்கு முன் சிறிது தண்ணீரில் போட்டு கழுவி, புளித்த மோரில் 5 நிமிடம் ஊறவைத்து வடித்து, பின்னர் துணியில் நன்றாக உலர்த்தி வறுக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சுண்டைக்காய் வத்தலை மிதமான தீயில் கருகாமல் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். கறிவேப்பிலை, பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு சில விநாடிகள் கிளறி ஆற விடவும்.
ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய கலவையைப் போட்டு மையமாக அரைக்கவும்.
அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மீதம் உள்ள சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் மேலே பிரிந்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை 10–15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இறுதியாக வறுத்த சுண்டைக்காய் வத்தலை சேர்த்து மேலும் 3–5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
சுவையும் மணமும் கொண்ட சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி.
சூடான சாதத்துடன் அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் சூப்பர்!
கசப்பில்லாமல் சமைக்க பாட்டியின் டிப்ஸ்:
1. வத்தல் மற்றும் புளிக்குழம்புக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். இது நல்ல வாசனையைத் தரும். மேலும் வத்தலின் கசப்பைக் குறைக்கும்.
2. மிதமான தீயில் வறுக்க வேண்டும். வத்தலைக் கருகும் அளவுக்கு வறுத்தால் கசப்பு அதிகமாகும்.
3. இனிப்புச் சுவையை விரும்புவோர் ஒரு ஸ்பூன் பொடி செய்த வெல்லத்தை இறுதியாக குழம்பில் சேர்க்கலாம். இது கசப்பை சமநிலைப்படுத்தும்.
4. பொரித்த வத்தலை ஆரம்பத்திலேயே போடாமல், புளிக்குழம்பு நன்றாகக் கொதித்த பிறகு சேர்த்து 3–5 நிமிடங்கள் மட்டும் கொதிக்க விடவேண்டும்.
5. மிகவும் கசப்பான வத்தல் என்றால், வறுப்பதற்கு முன் சிறிது தண்ணீரில் கழுவி, 5 நிமிடம் மோரில் ஊறவைத்து வடித்து, பின்னர் துணியில் நன்றாக உலர்த்தி வறுக்க கசப்புச் சுவை குறையும்.
6. நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகமாகவும், குழம்பை நன்றாகக் கொதிக்கவைத்தும் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
7. பச்சை சுண்டைக்காய் குழம்பு செய்யும் முன் அதனை நன்றாகத் தட்டி அரைமணி நேரம் மோரில் ஊற வைத்து எடுத்து, பின் நல்லெண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, பிறகு குழம்பில் சேர்க்கவும்.
8. வத்தல் கசக்காமல் இருக்க கருகும் வரை வறுக்கக் கூடாது.
9. வத்தல்கள் எதுவாயிருந்தாலும் உபயோகிக்கும்போது ஒரு முறை தண்ணீரில் போட்டு கழுவி பிறகு வறுத்து உபயோகிக்க வேண்டும்.